Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, May 8, 2018

பரப்பார்வை - 2: கமல் ரஜினி...காதலா காதலா!

"காதலா காதலா" திரைப்படத்திற்கு 20 வயதாகிறது!!!

கமலின் உச்சம் 1985-ல் இருந்து 2003 வரை எனக்கருதலாம். அந்தக்காலகட்டத்தில் தான் ஒரு 'சீரியஸ்' படம், அடுத்து ஒரு 'காமர்ஷியல்' படம் என்ற format-ல் இயங்கிக்கொண்டிருந்தார். 'குணா', 'சிங்கார வேலன்'.. 'தேவர் மகன்', 'மகாராசன்'.. 'மகாநதி', 'சதி லீலாவதி' என்று அவர் தொட்டதெல்லாம் துலக்கிய காலம் அது. என்னைப்போன்ற 'ஏலகைவர்க'ளுக்கு விரலை வெட்டாத துரோணராக மாறினார்.

தமிழ் சினிமாவிற்கு கமலின் பரிசோதனை முயற்சிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, அல்லது அதை விட முக்கியம் அவரது 'காமெடி'/கமர்ஷியல் படங்கள். பலரும் அவரது நகைச்சுவை உச்சமாக நினைப்பது "மைகேல் மதன காமராஜ"னைத்தான். எனக்கு அதில் பரிபூரண உடன்பாடு இல்லை. அது அவரது 'கமர்ஸியல்' கோபுரத்தின் மேலடுக்கில் இருந்தாலும், அதன் கலசம் "காதலா காதலா" என்பேன். காரணம் - மை.ம.கா, நகைச்சுவை மட்டும் அல்லாது - சிறந்த பாடல்கள், 4 வேடங்கள் ஏற்று நடித்த 'கிம்மிக்', ஒரு சுவாரசியமான கதை என்று பல அம்சங்கள் இருந்தது. கா.கா. அப்படி இல்லை. "காசுமேல"வைத்தவிர ஹிட் பாடல்கள் இல்லை, பல முகங்கள் கொண்ட கமல் இல்லை, அதி முக்கியமாக கதை, இல்லவே இல்லை. சிரிப்பு மட்டும்தான் குறிக்கோள். ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு ஜோக்ஸை வைத்திருக்கும் படம். அப்படி, வெறும் "ஜோக்ஸ் பெர் மினிட்' அளவில் மை.ம.கா-வை விட சிறந்தது கா.கா.

ஒரு சிறிய உதாரணம் -
---
கமல், கோவை சரளாவை எதோ சமாளித்துக்கொண்டு இருக்கையில், அவர் இருக்கும் வாடகை பங்களாவின் சொந்தக்காரர், S.N. லட்சுமி (ஒரு முஸ்லீம் தாதி பாத்திரம்) பர்தா அணிந்துகொண்டு வீட்டை திரும்பப்பெற வருகிறார்.

SNL: க்யா க்யா க்யா ஹோ ரஹா ஹை?

கோவை: இரு யார்ரா? கருப்பா காக்கா மாதிரி கா கான்னு கத்திகினு வர்றது?

கமல்: காக்கா-வோட wifeதான்!

கோவை: காக்காவோட wife-ஆ? (தன குழந்தையிடம்).. பார்ரா காக்காவுக்கேல்லாம் wife கிடைக்குது, அம்மாவுக்குத்தான் husband-ஏ கிடைக்க மாட்டேங்குது
---
முழுத் திரைப்படமும் இதோ -


=====

நான் இரண்டு வாரங்களுக்கு முன் எழுதிய 'பரப்பார்வை'யை படித்துவிட்டு என்னிடம் சிலர் சில கேள்விகள் எழுப்பினார்கள். அதில் டாப் 5 கேள்விகளை தேர்ந்தெடுத்து, பதில்கள் இதோ..

1. உனக்கு ஏன் மோடி மீது இவ்வளவு கோவம்? Mob mentality-ஆ? வேற யாரவது இவ்ளோ போல்டா டெசிஷன்ஸ் எடுத்து பாத்துருக்கியா? மோடி இந்தியா-வை அமேரிக்கா ஆக்க முயற்சிக்கிறார். உனக்கு புரியலை.

எனக்கு மோடி மீது கோவம் இல்லை. வருத்தம் தான். அவர் இந்தியா-வை அமெரிக்கா ஆக்க முயற்சிக்கிறார் என்பது கட்டுமானத்திலோ, நாட்டு வளங்களை காப்பதிலோ, தொழில்நுட்ப வளர்ச்சியிலோ இருப்பதை நான் எதிர்க்கவில்லை. அவர் மெளனமாக ஆமோதிக்கும் மதவாத செயல்களை நான் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. உதாரணம் - ஆசிபா கற்பழிப்பு (அதை 'கத்துவா சம்பவம்' என்றுதான் கூற வேண்டுமாம். போங்கடா டேய்). நாட்டின் தலைவரின் moral compas சரியாக இல்லை என்றால் அவர் நாட்டை தவறான பாதையில்தான் இழுத்துச் செல்ல முடியும். அவரது moral compas சரி இல்லை என்று சொல்ல நீ யார் என்று கேட்டால், நான் யாருமே இல்லை.. அவர் நடவடிக்கைகளை பரப்பார்வையில் இருந்து பார்ப்பவன். அவ்வளவே.

உம்: https://en.wikipedia.org/wiki/2002_Gujarat_riots

De-Monetization-ஐ பெரிய உதாரணமாக காட்டும் மோடி ஆதரவாளர்களுக்கும், எனக்கும், அதன் காரணமோ, அதன் விளைவோ புரிவதில்லை. அதனால் நான் அதற்க்கு சார்பாகவும் இல்லை, விரோதமாகவும் இல்லை. "Long term-ல நல்லது" என்று குருமூர்த்தி முன்மொழிந்ததை, மோடி ஆதரவாளர்களும் பின்மொழிகிறார்கள். எளிமையான விளக்கம் இன்றளவும் இல்லை. Atleast என்னிடம் இல்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

இதில் வெடிக்க என்னவென்றால் - பெரும்பாலான மோடி ஆதரவாளர்கள், அமெரிக்க அதிபரான டிரம்பை எதிர்க்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். மோடிக்கும் டிரம்பிறக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இருவரும் இன உணர்ச்சியை மக்களிடம் விதைத்தே ஆதரவை சம்பாதித்தவர்கள். ஜெயித்தவர்கள். மோடி நாசூக்காக செய்கிறார், டிரம்ப்... ஹீ ஹீ..

சரிப்பா... மோடி வேண்டாம்.. அப்போ வேற யாரு இருக்கா? என்று கேட்பவர்களுக்கு - பதில், மௌனமே.

2. பிஜேபி மீது அப்படி என்ன வெறுப்பு?

பிஜேபி மீது மட்டும் வெறுப்பு அல்ல. பிஜேபி மீதி கூடுதல் வெறுப்பு அவ்வளவுதான். காரணம் அவர்களது வேர். ஹிந்துத்வம். பிளஸ் - பிஜேபியின் முகங்கள் - அதாவது அந்தக்காட்சியின் கோ.ப.சே.க்கள் - ஹெச்.ராஜா / எஸ்.வீ.சேகர் போன்றவர்கள்.

இருவரும் எடுக்கும் ஆயுதம் "அண்டி இண்டியன்", "ஆண்டி-ஹிண்டு".. எஸ்.வீ. சேகர் ஒரு பேட்டியில் "கடவுளை நம்புகிறவன் முட்டாள்ன்னு நீ சொன்னா நான் சும்மா இருக்கணுமா? நீ கிறுக்கன்னு சொல்றேன். நீ அசிங்கம்ன்னு நான் சொல்றேன்" என்கிறார்.

இதற்க்கு பதில் கூறுவதையே தரக்குறைவாக கருதுகிறேன். இருந்தாலும், அவர் கருத்திற்கு பதில் அளிப்பது தேவையாக இருக்கிறது.

"ஜாதியெல்லாம் இருக்கு! சதுர்வர்ணம் இருக்கு! நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன்.." என்று நீங்கள் முதலில் கூறியதால்தான் இவர்கள் இப்படிக்கூறுகிறார்கள் என்று உங்களுக்கு ஏன் புரியவில்லை? இதற்க்கு மட்டும் விளக்கம் அளியுங்கள். போதும்.

பிஜேபி-யின் உடனதித்தேவை - மற்றவரை மதிக்கும் ஒரு நல்ல பேச்சாளர்.

3. உனக்கெல்லாம் அரசியல் தேவையா?
தேவை இல்லைதான். கொஞ்சம் படிக்கிறேன். ஆதங்கப்படுகிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். தட்ஸ் ஆல்.


4. காங்கிரஸ் பத்தி சொல்லவே இல்லையே?
படித்துக்கொண்டு இருக்கிறேன். பழைய திருடர்களிடம் புதிய உத்திகள் இல்லாதது போலத்தெரிகிறது.


5. ரஜினியா கமலா?
கமலின் professionalism பிடிக்கும். ரஜினியின் personal life பிடிக்கும். இதில் யாரை தேர்ந்தெடுப்பது?

கமல் ரஜினி பந்தயத்தில்  ரஜினியிடம் எனக்கு இருக்கும் பிரச்சனைகள் -

- 1996ல் முத்து படத்தில் "நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" என்றார். பாபாவில் (2002) "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்" என்றார். இப்போதும் "இதோ வந்துட்டேன்" என்கிறாரே தவிர இன்னும் வர வில்லை. கமல் quantitative measure-ல் இப்போதே முன்னிலை வகிக்கிறார்.

- பொதுவாக கமல் உளறுவார்.. ஆனால் பேச வேண்டிய விஷயத்தை பேசிவிடுவார். ரஜினி பேசுவதையே தவிர்க்கிறார்.

-  திடீர் எம்.ஜி.ஆர் பற்று ரஜினியின் மீது இருந்த credibility-யை கொஞ்சம் உலுக்கியது. மீண்டும் நீண்ட மௌனம். காலா ரிலீஸ் முன்னாடி சர்ச்சை வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ.. டைம் இல்ல தலைவரே. பீ குயிக்!

- ரஜினி-யின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் பிஜேபி-க்காரர்கள். அவர்களே கமல் எதிர்ப்பையும் பரப்புகிறார்கள் - "கமலுக்கு "கிறிஸ்டியன் மிஷனரி" காசு கொடுக்குது" என்று ஒரு செய்தி வருகிறது. இதில் முதலில் ஏன் மதம் வர வேண்டும்? கொடுத்தால் என்ன? அதை வைத்துக்கொண்டு கமல் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியமே தவிர யார் கொடுத்தார் என்பது அல்ல! Again பிஜேபி.. again மதம்!

சரி - கமல் என்ன செய்தார்?

- ஒரு கிராமத்தை தத்து எடுத்தார். எதற்க்காக? ஏன் இதை - இப்போது செய்ய வேண்டும்? நீங்கள் நடிகராக இருந்து இதை செய்தால் மக்களிடம் வரும் "ஓ!"விற்கும், நீங்கள் கட்சி துவங்கி அரசியலில் போட்டியிட நினைக்கும் தருவாயில் செய்யும் போது மக்களிடம் வரும் "ஓ!" விற்கும் நிறைய்ய வித்தியாசங்கள் உண்டு.

- கமலின் MNM-த்தின் முதல் சருக்கலாக  நான் கருதுவது - அவர்களின் whistle app. ஏன் இது உங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டும் ப்ரத்யேகம்? மேலும், இதில் குறைகளை கூறலாம், பதிவேற்றலாம்; ஆம் பிரச்சனை இருக்கிறது என்று உறுதி செய்யலாம். அதோடு இதன் பயன் நின்று விடுகிறது. பிரச்சனைகளை சரி செய்ய இந்த app மக்களையோ, தன்னார்வலர்களையோ திரட்ட வசதி கொடுக்க வில்லை. இதைத்தான் மக்கள் இப்போது facebook-கிலும் twitter-ரிலும்செய்து வருகிறார்களே. பிறகு எதற்கு மய்யம் விசில்?

மய்யம் விசில் வந்ததன் ஒரே நன்மை என்னவென்றால் - இது வந்த இரண்டே நாட்களில் தமிழக அரசு - "நம்ம சென்னை" app வெளியிட்டு இருக்கிறது. அட் லீஸ்ட் கமலுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்று மற்றவர்கள் கொஞ்சம் திருந்தி நடந்தால் நல்லதுதான்...

So - கமலா ரஜினியா - தெரியல. Let us wait and watch.

------

மற்றபடி என்ன...

காவிரி இன்னும் வரவில்லை. இப்ப வா அப்ப வான்னு நம்மை கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அவரவர் இன்னும் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். கவர்னர், கன்னத்தில் கைவைத்து விரல்களை பொசுக்கிக்கொண்டார். எஸ்.வீ. சேகர் செருப்படிக்கு பயந்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தார். எடப்பாடி பழனிச்சாமி, நிஜ சாமியானார்..
நீட் பிரச்சனையின் அழுத்தத்தில் ஒரு மாணவரின் தந்தை இறந்தே போனார். அந்த மாணவரின் படிப்புச்செலவை தமிழக அரசே ஏற்கிறது... இவை எல்லாம் நான் எழுதிக்கொண்டு இருக்கும்போதே நடந்த 'பிரேக்கிங் நியூஸ்'.

-- இறுதியாக கமல்-கிரேஸி பாணியில் ஒரு ஜோக் (நெட்டில் சுட்டது)--

ஒரு வேளை அனுபவமே இல்லாமல், கமல் முதலமைச்சர் ஆனால் அவரை எப்படி அழைப்பது?


முதல் amateur!!

(தொடரும்...)

கொசுறு: 
நான் கடந்த ஒரு மாதமாக ஒரு பக்கட்; அதிகபட்சம் இரண்டு பக்கட் தண்ணீரில் தான் குளிக்கிறேன். ஷவர் உபயோகத்தை நிறுத்தி விட்டேன்.






Thursday, April 12, 2018

பரப்பார்வை - 1: காவிரி அரசியல்

(இந்தத்தளத்தில் இனி மாதம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அதை ஒரு தொடராக அமைத்தால் என்ன என்று தோன்றியது. இதோ - முதல் பதிவு. பரப்பார்வை - 1 )

சில நாட்களுக்கு முன்பு எனது 'ப்ளாக்' பதிவு ஒன்றில் உங்கள் கருத்துக்களை வெளியே சொல்லியே தீர வேண்டிய அவசியம் இல்லை என்று எழுதி இருந்தேன். அதை இப்போது நானே மீறுகிறேன்.

நான் இது வரையில் யாரிடமும் எப்போதும் எனது அரசியல் பார்வைகளை பகிர்ந்து கொண்டதில்லை. காரணம், இங்கு அரசியல் என்பது - கட்சிகளையும், தலைவர்களையும் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்கிறது. அரசியல் என்பது அது மட்டும் அல்ல.  எனக்கு அரசியல் வாதிகள் மீதோ, கட்சிகளின் மீதோ என்றைக்கும் நம்பிக்கை  இருந்ததில்லை. இப்போதும் அப்படித்தான். ஒன்றன் மீதான அவநம்பிக்கையை; அதை நம்புகிறவர்களிடமோ, அதில் ஆதாயம் தேடுபவர்களிடமோ, சொல்லிப்புரியவைக்க, அதீத பொறுமை வேண்டும். அவநம்பிக்கையே ஒரு விதத்தில் நம்பிக்கைதானே? நம்பிக்கை சார்ந்த வாதங்களில், வாதி, பிரதிவாதி இருவரும் சார்பற்ற நிலையில் இருந்து வாதம் செய்வது அரிது. ஆகையால்  நான் அரசியல் பெரும்பாலும் பேசுவதில்லை. 

ஆனால் இப்போது பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய twitter-உம், facebook-உம் அரசியலை நமக்கு மிக அருகில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இவ்வளவு அருகில் நடக்கும் நாடகங்களை பார்த்தும், பலர் தங்களது தளத்தில் இருந்து தளராமல் இருப்பதுதான் - என்னை இந்தப்பதிவை எழுதத் தூண்டுகிறது. 

இது அனைத்துக்கட்சிகளுக்கும், போர் வரும் வரை காத்திருப்பவர்களுக்கும் எதிரான பதிவே. யார் மனதையும் "தனித்து"ப்  புண் படுத்தும் நோக்கம் இல்லை.

======= நாள் 12/04/2018 =====

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாகவேத் தெரிகிறது. எத்தனைக் கட்சிகள், எத்தனை அமைப்புகள் எத்தனை விதமாகப் போராடினாலும் செவி சாய்ப்பதாக இல்லை. திட்டவட்டமாக இது அரசியல். கர்நாடகத் தேர்தலை வைத்து அதிகாரப் போக்குடன் நடத்தப்படும் அரசியல். கீழே இருக்கும் இந்திய அரசியல் வரைபடத்தைப் பார்த்தால் அவர்களது நோக்கம் தெளிவாக புரிந்துவிடும்.


"வாழ்க்கையும் எழுத்தும்" என்ற புத்தகத்தில், என் வாத்தியார் சுஜாதா அன்றே சொன்னார் - கர்நாடகம், தமிழகம் இரண்டிலும் ஒரே கட்சி ஆச்சிக்கு வந்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று. அதனால் இது கர்நாடகத்தை மட்டும் குறி வைத்து நகர்த்தப்படும் அரசியல் காய் அல்ல. "நாங்கள் இல்லை என்றால் நீங்கள் பிழைக்கவே முடியாது" என்று சூசகமாக நமக்கு சொல்லும் பிஜேபி-யின் தந்திரம்.தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பிஜேபி-யும் (அதிகார பலத்துடன்) வருகிறார்கள். 

"சரி வரட்டுமே! இங்கே அ. தி. மு. க-வும் சரி இல்லை.. தி.மு.க-வும் சரி இல்லை - புதுசா அவங்க வந்தாதான் என்ன?" என்று யோசிக்க முடியவில்லை. அவர்களது வலது சாரிக் கொள்கைகளும், மதவாதத் தத்துவங்களும் நம்மை பீதி அடையச் செய்கின்றன. அது தமிழ்நாட்டிற்குச் சரிப்பட்டு வராது. இங்கே சமீபமாகத்தான் சாதிகளால் பிரிந்திருப்பதை ஓரளவு சரி செய்து இருக்கிறோம். இவர்கள் வந்தால், அது அனைத்தும் வீணாகி, அதற்கு மேல் மதவாதமும் தலை விரிக்கத் தொடங்கும். 

வாட மாநிலங்களில் பி.ஜெ.பி. கையில் எடுத்த "divide and conquer" (இந்து vs முஸ்லிம்) தமிழ் நாட்டில் அவ்வளவு சுலபமாக செல்லுபடி அக வில்லை. அது செல்லுபடி ஆகத்தேவையான அவர்களது   "ஹிந்துத்வா" கொள்கையும் இங்கு வேகவில்லை. தமிழ் நாட்டில் 90 விழுக்காடு கடவுளை நம்புகிறவர்கள். ஆனால் கடவுள் இல்லை என்று சொன்ன "பெரியாரை" அவமதித்தால், அதில் 89 விழுக்காடு மக்களுக்கு கோவம் வருகிறது. இந்தப் புதிர் அவர்களுக்கு விளங்கவில்லை. விளங்காது. காரணம், பெரியாரை கடவுள் மறுப்புக்காக மட்டும் மக்கள் நேசிக்க வில்லை.

Image result for periyar gobackmodi

நடிகர் விஜய்-யை ஜோசப் விஜய் என்றார்கள், ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டதற்கு கடவுளை நம்பாததே காரணம் என்றார்கள், ஆண்டாளுக்கு கொந்தளித்தார்கள் (வேறொருவரின் மேற்க்கோளை கூறியதற்கா இத்தனைக் கூச்சல்?), நியூட்ரினோ, நெடுவாசல், வாடிவாசல்,  என்று 'நீட்'டி முழக்கினாரகள், விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்திற்குக் கூட செவி சாய்க்க மறுத்தார்கள்... கடைசியாக இது  காவேரி மேலாண்மையில் வந்து நிற்கிறது. இவை அனைத்தும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் அரங்கேறியவை. பெரும்பாலும் ஜேஜே-வின் மறைவிற்குப்பிறகு. 'மாநில அரசால் உங்களுக்கு பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை.. எங்களிடம் வாருங்கள், இவை அனைத்திலிருந்தும் விடுபடலாம்' என்று சொல்லாமல் சொல்கிறார்கள். 

கடந்த 60 ஆண்டுகளாக திராவிட காட்சிகள் மட்டுமே ஆண்ட மாநிலம் இது. மற்ற மாநிலங்களைப்போல இடது வலதெல்லாம் இங்கு இருந்ததில்லை. தி மு க, ஆ தி மு க - இரண்டுமே (தன்னளவில்) இடதுசாரிகள் தான் (மத்தியில் கூட்டணிகளை மாறி மாறி அமைத்துக்கொண்டது வேறு கதை) இப்படி வளர்ந்த இந்த தலைமுறைக்கு, ஹெச். ராஜா, தமிழிசை, எஸ்.வீ. சேகர் போன்றவர்கள் பேசுவதைக் கேட்டாலே கூசுகிறது. இவர்களை எல்லாம் யாரும் பேட்டியே எடுக்கக்கூடாது. இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்தது Y.G. மகேந்திரன். மக்கள் இவரை மறந்து வெகு நாட்கள் ஆகிறது. இவரை தூசி தட்டி இந்த மீடியாக்கள் வெளியே எடுத்து வரக்காரணம் இவரது 'கோ-பிரதர்', ரஜினி.

மதவாதத்தை முன்னிறுத்தாமல் இருந்தால் பிஜேபி ஒரு நல்ல ...



இவர்கள் செய்யும் இந்த குளறுபடியால், ஒரே ஒரு நன்மை மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது. மாநிலக் கட்சிகள், அதன் தலைவர்களின் முகங்கள், அனைத்தும் அம்பலமாகிறது. EPS, OPS பிஜேபி-யின் பிடியில். இவர்களுக்கு பம்மிப் பம்மியே பழகிவிட்டதால், பம்முவதற்கு அம்மா இல்லாமல் போனவுடன், பதறிப்போனார்கள். தியானம் எல்லாம் செய்து, அம்மாவிடமே கேட்டு தெளிந்தவுடன், இப்போது மோடியைப்பார்த்து பம்முகிறார்கள். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. 

சரி - தி.மு.க-வில் என்ன நடக்கிறது? சத்தியமாக தெரியவில்லை..! மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். ஒரு விதத்தில் அமைதியாக இருப்பது நல்லதே. தற்போது உள்ள சூழலில் வாயைத் திறந்து அசிங்கப்படுவதற்கு வாய் பேசாமல், இருக்கும் செல்வாக்கை/பெரும்பான்மையை காப்பாற்றிக்கொள்ளலாம். அமைதியையும் மீறி - "சொடக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கவிழ்ப்பேன்" என்று சொன்ன ஸ்டாலினுக்கு, பாவம் சொடக்கு தான் போடத்தெரியவில்லை. தெரிந்திருந்தால் என்றோ கவிழ்த்தி இருப்பாரோ?



நாம் தமிழர் அண்ணன்கள் புதிதாய் எதோ செய்தார்கள்..அனால் இப்போது எதற்க்கெடுத்தாலும் இல்லுமினாட்டி என்கிறார்கள். இதற்கு தி மு க பரவாயில்லை.. உளறினாலும் அவர்கள் பைத்தியங்கள் இல்லை. 

மக்கள் நீதி மய்யம் என்ன செய்கிறது? தலைவன் இருக்கிறான் என்று நினைத்தால் - "தூத்துக்குடிக்கு அழைப்பு விடுத்தால் செல்வேன்" என்கிறார் உலக நாயகன். அதற்க்கு மக்கள் சிணுங்கி, "சரி முதல் பால், trials.. இனிமே all-reals.. சரியா?" என்று மன்னித்தார்கள். வேறு என்ன செய்தார் என்று பார்த்தால் நடந்த காவேரி பிரச்சனையில், மௌன போராட்டத்தில் கலந்து கொள்கிறார். சிம்பு-விற்கு இருந்த தைரியம் கமலுக்கு இலாமல் போனது வருத்தமே. 

மௌனப் போராட்டத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்: அறப்போராட்டத்திற்கு புதிய இலக்கணம் சொல்லியிருக்கிறார்கள் திரை உலகத்தினர். ஒருவருக்கொருவர் கதை பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அலைபேசியில் பேசிக்கொண்டும் இருக்கத்தான் போராட்டமா? சமோசா பிஸ்கட்-எல்லாம் கொடுக்காதது மட்டும் தான் அங்கு குறை! இப்படி இருந்த இவர்களை வலதுசாரிகள் பயன் படுத்திக்கொண்டார்கள். எதோ ஒரு யூ டியூப் பதிவில், தமிழ்த் தாய் வாழ்த்தை யாரோ பாட, இவர்கள் எல்லாம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பதைப்போல் யாரோ fake வீடியோ ஒன்றை பரப்பி "இவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா" என்று கொழுத்திப் போட்டு குளிர் காய வசதியாய் அமைந்தது இந்த சம்பவம். 

     

இப்படித்தான் தமிழ் திரை உலகம் மக்கள் உரிமைக்காக போராடும் என்றால், அது வாயை மட்டும் இன்றி மற்ற அனைத்தையும் மூடிக்கொண்டு வீட்டிலேயே அமர்ந்து இருப்பது நல்லது. 

மீண்டும் உலக நாயகன்: 
எல்லாம் முடிந்த நேரத்தில், "நமஸ்தே மோடிஜி" என்று யூ டியூப் பதிவு ஒன்றை ஏற்றுகிறார்.  கொஞ்சம் கோவப்படுங்கள் நாயகரே.  உங்களிடம் "tenacity" - தீர்மானம் இருந்தாலும், கொஞ்சம் உணர்ச்சி கம்மியாக இருக்கிறது. "எனது நடிப்பில் அரசியல் இல்லை.. அரசியலில் நடிப்பு இருக்காது" என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. அனால் இந்தப்பக்கம் "பாசம்மிக்க தம்பிகளே!" என்று சீமான் முழங்க, நீங்கள் மய்யத்தில் நின்று பேசுவது சொத சொதவென்று இருக்கிறது. 

செயலில் சொத சொதப்பு இல்லாமல் இருந்தால் சரி.

பலர் - கமல் பி.ஜெ.பி ஆள் தான் என்கிறார்கள். அதனால்தான் "சவுண்ட்" கம்மியாக இருக்கிறது என்கிறார்கள். அதற்க்கு அவர் "தமிழ்நாட்டில் திராவிடத்தை யாரும் அழிக்க முடியாது" என்று பதிலளித்தார். அதை அவர் சொல்லாவிட்டாலும், கமலின் ஹே-ராம் படமே அவர் பிஜேபியை நாட மாட்டார் என்பதற்கு ஒரு உதாரணம். அந்தப்படத்தில் வரும் ஸ்ரீ ராம் அப்யங்கர் கதாபாத்திரம் RSS அமைப்பை உருவமை படுத்தியே அமைக்கப்பட்ட ஒன்று. அதில் இருந்து அவர் அன்றே விடு பட்டவர். மேலும் அவரது கடவுள் மறுப்புக்கொள்கை பிஜேபியுடன் என்றும் ஒத்துப்போகாது. நம்புவோமாக.

கொசுறு: காந்தியை கொன்ற கோட்ஸே-யும் RSS உறுப்பினர்தான். காந்தியை கொன்றதற்கு  அவரது இந்து-முஸ்லிம் ஒருங்கிணைப்பு கொள்கைகளைத்தான் கோட்ஸே காரணமாகச் சொன்னான். காந்தி இறந்த பிறகு RSS அமைப்பை நேரு "தீவிரவாத இயக்கம்" என்று 1948-ல் தடை செய்தது வரலாறு. 35 ஆண்டுகள் கழித்து, RSS இயக்கம் பிஜேபி என்ற புதிய முன்தோற்றத்துடன் மீண்டும் வலம் வந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்து 1998-ல் ஆட்சியைப் பிடித்தது. அன்று காந்தியைக்கொன்ற RSS, இன்று வரை இந்துக்களை முன்னிலைப்படுத்தியே அரசியல் நடத்தி வருகிறது. 

பிஜேபியுடன் கூட்டு வைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நபர் - ரஜினி! எடுத்த உடனேயே ஆன்மீக அரசியல் என்கிறார். அவர் சொல்கிற ஆன்மிகம் "நேர்மையான" என்பதைக் குறித்தாலும், மக்களுக்கு அது புரியாது. தெரியாது. "துக்ளக்" ஆசிரியர் குருமூர்த்தி மோடியும் ரஜினியும் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்கிறார். தமிழிசை ரஜினியை வரவேற்கிறார். என்னதான் ரஜினி எனக்குப் பின்னால் பிஜேபி இல்லை என்று கூறினாலும், அது அவ்வளவு நம்பும்படியாக இல்லை. திடீரென்று எம்.ஜீ.ஆர்.மீது பாசம் வருகிறது; திடீரென்று இமையம் போய் விடுகிறார். ஒன்றும் விளங்கவில்லை. போர் வரும் பொது பார்த்துக்கொள்ளலாம் என்கிறார். அப்போ, இப்போ நடக்கறதெல்லாம் என்ன தலைவரே?

மற்ற சில்லறை காட்சிகள் சில்லறைகளாகவே இருக்கிறார்கள். 

இவர்கள் அனைவரும் மக்கள் பிரச்னையை தங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்கும் ஆயுதமாகவே பயன் படுத்துகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அது மட்டுமே நோக்கமாக இருப்பதுதான் வருத்தம். தங்கள் கட்சியின் தர்மமே நியாயம் ஆகி விடாது. 

தர்மம் வேறு. நியாயம் வேறு. நியாயத்திற்க்காக போராடுபவர்கள் மக்கள் மட்டுமே. 

இதற்க்கு நடுவில் IPL பிரச்சனை. மஞ்சள் சட்டை அணிந்தவர்களைத் தாக்கியது தவறென்றால், அடுத்தநாள் #GoBackModi-யின் போது கருப்பு சட்டை போட்டவர்களைத் தாக்கியதும் தவறுதானே? 

"என்னதான்டா சொல்ல வர்ற?" என்கிறீர்களா? :) 

இதை எல்லாம் பார்க்கிற போது - நம்மால் முடிந்தது ஒன்றே ஒன்று தான் என்று தோன்றுகிறது. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் - முதலில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். Viktor E. Frankl தனது "Man's search for meaning" என்ற புத்தகத்தில், "உன் சூழ்நிலையை மாற்ற முடியாத பொது, நீ உன்னை மாற்றிக்கொள்ளும் சவால் மட்டுமே உன் முன் இருக்கிறது" என்கிறார். 

காவிரி வரட்டும், வராமல் போகட்டும். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்கு இதை நம்பிக்கொண்டு இருப்பது? கிட்டத்தட்ட 130 ஆண்டுகளாக நடக்கும் இந்த அரசியல் விளையாட்டில் இனிமேலும் நம் தலைகள் உருளக்கூடாது. 

யாரையும், எந்த அரசியல் கட்சியையும் எதிர்பார்க்காமல் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மைகளில்தான் வருங்கால தமிழகம்வாழும். யாரும் வரப்போவதில்லை. உதவப்போவதும் இல்லை. இந்தச் சமூகத்திலே பிறந்தோம், சமூக மனிதனாக வளர்ந்தோம், இந்தச்சமூகத்திற்கு என்ன செய்தோம்? என்ற கேள்வியை இனி ஒவ்வொருநாளும் கேட்க வேண்டும். 

அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்     
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்     
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?     
என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.
இன்றைக்கு கறிஎன்ன? செலவு யாது?     
ஏகாலி வந்தானா? வேலைக் காரி     
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?     
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை     
ஒன்றுக்கு மூன்றாக விற்பது எந்நாள்?    
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு     
குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா?     
கொடுக்கலென்ன வாங்கலென்ன இவைதாம் கண்டோம்.
                                                                                          - பாரதி தாசன் 
மரங்களை வளர்க்க, ஏரிகளை தூர்வார, மழை நீர் சேமிக்க என்னென்ன வழிகள் உண்டோ அவை அனைத்தையும் அனைவரும் உடனே செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு குறைந்தது ஐந்து மணி நேரம் ஊருக்காக செலவிடலாம். குழுக்களாக கூடலாம், தெருவை சுத்தம் செய்யலாம்.. அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்று வேண்டியதை கேட்டுச் செய்யலாம். குறைந்த பட்சம் - நகரத்தில் இருப்பவர்கள் தினம் shower-ல் குளிக்காமல் வாளியில் குளிக்கலாம்... இப்படிச் சின்னச் சின்னத் துளிகளை சேமிப்போம். 

பெருவெள்ளம் வரும். 

(தொடரும்..)


Wednesday, September 14, 2016

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 25




நேற்று பெய்த மழையில் தொகை விரித்து ஆடியவள்,
இன்று வந்த மழையில் குடை பிடிக்கிறாள்..

குழப்பத்தில் மயில்! 

Thursday, March 17, 2016

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 24

சமூகக்கொலைகள் 

அவன் first rank வாங்கிட்டான்.. நீ வாங்கலையே?
அவன் pass ஆகிட்டான்.. நீ pass ஆகலையே?
அவன் வேலைக்கு போயிட்டான்.. நீ எப்போ settle ஆக idea?
அவன் வீடு வாங்கிட்டான்.. நீ எப்போ?


அவன் manager ஆகிட்டான்.. நீ இன்னும் senior தானா?
அவன் ரெண்டு கொழந்தை பெத்துக்கிட்டான்... நீயும் plan பண்ணலாம்ல?
அவன் புள்ள IIT ல.. உன் பையன் எப்படி?
அவன் Euro trip போனானாம்.. நீ திண்டிவனம் கூட போகலையே?

அவன் செத்துட்டான்.. நீ....?

Thursday, May 7, 2015

வெண்டைக்காய் புளிக்குழம்பு - சிறு கதை | Vendaikkaai PuLikkuzhambu - Tamil Short story


ஆடம்பரங்களுக்கும், அத்தியாவசியங்களுக்கும் அனாவசியங்களுக்கும் வித்யாசம் தெரியாமல் தத்தளிக்கும் தம்பதிகளின் ஜன சந்தையில் புதிதாய் சேர்ந்தவர்கள் ரவியும் நிரஞ்சனாவும். தமிழ் மேட்ரிமோனியில் பல 'கிளிக்'குகளுக்குப்பிறகு, முதல் உரையாடலிலேயே லேசாய் பிடித்துப்போய், பிடிக்காமல் போக அவகாசம் அளிக்காமல் தடாலென திருமணம் முடித்தவர்கள்.  இன்று வரை லேசாய் பிடித்திருப்பது - ஆச்சர்யம்..

 அடர்த்தியான சீராய் ட்ரிம்  செய்த  மீசை, 6 அடி, கோதுமை நிறம், கச்சித உடல், நேற்றித்தழும்பு, ஸ்லீவ்லெஸ்/ஷார்ட்ஸ், ரஹ்மான், எப்போதாவது சரக்கு பார்ட்டி,ரூபிக்ஸ் கியூப், செஸ், ஈ.எஸ்.பீ.என்., கிரிக்கெட் -  ரவி.

மைதா நிறம், பக்க  வகுடு, நெற்றிக்குங்குமம், விண்டோ ஷாப்பிங், சுடிதார், பீச், மிளகாய் பஜ்ஜி, மாவடு, வேலை, சுத்தமான வீடு, ரவி..ரவி..ரவி  - நிரஞ்சனா. 

2BHK வாடகை பிளாட், படுக்கை அறை A/C, வாரம் ஒரு முறை மரினா, நல்ல திரைஅரங்கில் ஒரு படம், அவ்வப்போது ரெஸ்டாரன்ட் , கொஞ்சம் சேமிப்பு, சில்லறை கோபங்கள், சமாதானங்கள் என்று இயல்பாய் வாழும், இன்னும் புதிதாய் இருக்கும் இளைஞர்கள். 

அசோக் - இவர்கள் இருவருக்கும் நண்பன். ஒரு சனிக்கிழமை மாலை ரவியிடம் எதோ பேச வேண்டும் என்று வந்திருந்தான். வந்ததிலிருந்துபெரிதாய் ஒன்றும் பேசவில்லை. வெகு நேரம் கழித்து நிரஞ்சனா குடுத்த காபியை ஒரு சிப் சிப்பிவிட்டு - 

"இது, காபி..இது?.." என்று ரவியைப்பார்த்து கேட்டான்.

ரவி என்ன சொல்வதென்று தெரியாமல் வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கையில்

"...காபி..." -என்று முடித்தான்,  கோபத்தோடும் விரக்தியோடும்.
"என்னடி சொல்றான்?", என்றன ரவியின் கண்கள். "என்னை கேட்டா?" என்றது நிருவின் பிதுங்கிய வாய்.


"என்னடா ஆச்சு? எதோ பேசணும்ன்னு சொன்ன?

"டேய்..என் பொண்டாட்டி மண்ணு மாதிரி சமைக்கராடா!", என்றான். 

"எனக்கு புரியல... கொஞ்சம் நிதானமா சொல்லு "

"உனக்கு எப்படிடா புரியும்.. நிரஞ்சனாதான் நல்லா சமைக்கராங்களே!"

"என்னடா ஆச்சு?"

"சிஸ்டர்..நீங்களே சொல்லுங்க. ஒரு மனுஷன் வீட்டுக்கு நாயா வேலை பாத்துட்டு வர்றான். வர்றவனுக்கு வாய்லயே வைக்க முடியாத மாதிரி சமைச்சு போட்டா என்ன பண்ணுவான்? கோவம் வராதா?"

ரவியும் நிரஞ்சனாவும் அவன் மேலும் தொடர அமைதியாய் இருந்தார்கள்.

"ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல. டெய்லி உப்பு சப்பு இல்லாம சாப்படனும்னா நான் என்னதான் பண்றது? தோசை செஞ்சா புளிக்குது.. இட்லி செஞ்சா கல்லு மாதிரி இருக்கு. உப்புமா செஞ்சா வேகாம இருக்கு. சாதம் கொழயுது.. சாம்பாருக்கு பதிலா நெஜம்மாவே மண்ண சாப்டலாம். அதையாவது  மண்ணுன்னு தெரிஞ்சு சாப்பிடுவோம். இது ஏமாத்து வேலை! எப்படி 'அப்படி' ஒரு சாம்பார் பண்ண முடியுதுன்னு தெரியலை..பண்ணி அவளே எப்படி சாப்பிடுறான்னும் தெரியலை. ரவி, நீயெல்லாம் சாப்பிட்டேன்னா ஹாஸ்பிட்டல்ல   அட்மிட் ஆகிடுவ! டெய்லி வெளில சாப்பிட முடியுமாடா?"

"ஹோட்டல்லயா டெய்லி?"

"ஹோட்டல்லயாவது டெய்லி..!"

ரவிக்கு ஓரளவு புரிந்தாலும் இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. 

நிரஞ்சனா கொஞ்சம் மௌனம் கழித்து நிதானமாக ,"அட்லீஸ்ட் ட்ரை பண்றாங்களா?"

"தெரியல சிஸ்டர். எனக்கு புடிச்சுருக்கா புடிக்கலையா ஒண்ணுமே கண்டுக்கற மாதிரி தெரியலை..."

"சமையலுக்கு ஆள் வேச்சுக்கோயேண்டா?"

"ஆள் புடிச்சு தரியா?"

"இத பேசத்தான் வந்தியா?"

"அது கெடக்கு!! பொலப்பத்த கேளுடா! டேய், நான் பொண்டாட்டி கையால சாப்பிடனும்ன்னு நினைக்கறது தப்பா? பொண்ணு பாக்க போறப்போ சமைச்சு காமின்னா சொல்ல முடியும்?"

"சொல்லலாம்...!"

"நீ சொன்னியா?!"

"இல்லடா.. சொல்லலாம்ன்னு சொல்றேன்.. பசங்களுக்கு  கொஞ்சம் இளகுன மனசுடா.. சிரிச்சு பேசினாலே தலை ஆட்டிடறோம் .. என் அபீஸ்ல ஒரு பொண்ணு, ஒரு பையன ரிஜெக்ட்  பண்ணிட்டா . ஏன்ன்னு கேட்டா, ரொம்ப நல்லவனா இருக்கான்ன்னு சொல்றா ."

"அது சரி.." என்று சன்னமாக சிரித்தான்.

அவனை கொஞ்சம் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். அவன் பேசவேண்டும் என்று வந்த விஷயம் பற்றி பேசாமலேயே சென்றான். சமையலுக்கு ஆள் தேவை விளம்பரம் நாளை தினமணியில் வரும். உங்களுக்கு யாரையாவது தெரிந்தால் 9098767890க்கு அழைக்க சொல்லுங்கள். பாவம்.

                                                                   * * *

அன்று இரவு - 

"கீதா அவ்வளவு மோசமாவா சமைப்பாங்க?"

"தெரியலையே.. ஒருத்தன் இவ்வளவு நொந்து போயிருக்கான்னா மோசமாத்தான இருக்கணும்?"

"ம்ம்.."

"சரி..வெளியில போய் சாப்பிடலாமா?"

"வீட்ல பழசு நிறையா இருக்குடா."

"நல்ல்லா மொரு மொருன்னு தோசை சாபடனும் போல இருக்கு..ப்ளீஸ்!"

"நான் சுட்டு தர்ரேன்.. சாம்பார் எப்படியும் காலி பண்ணனும். நாளைக்கு வரைக்கும் தாங்காது."

"நான் மொரு மொருன்னு சொன்னேன்.. உனக்கு அது வராது. நாளைக்கு ஆபீஸ்க்கு குடுத்து விடு. கடமை தவறாத கணவனா சாப்டுர்றேன்."

"அதெல்லாம் நல்லாத்தான் வரும்.முந்தாநாள்தான் போனோம். அதுக்குள்ள என்ன? என் தோசை போதும் இன்னைக்கு...அதெல்லாம் சரி..நீ அசோக் மாதிரி இப்படியெல்லாம் வெளில யார்டயாது போய் சொன்னன்னு தெரிஞ்சுது.."

"ச்ச..ச்ச.. உனக்கு என்ன. ஓரளவு சுமாரா..."

முறைத்..

".. நல்லாவே சமைக்கற. இன்னும் கொஞ்ச நாள்ல பக்குவம் வந்துடும்.."

...துக்கொண்டே, "ஏன் சொல்ல மாட்ட.. உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாலும் இப்படிதான் பேசுவிங்க.."

"வாய்ல வைக்கற மாதிரி சமைக்கறதே இந்த காலத்து பொண்ணுங்களுக்கு பெரிய விஷயம்... ருசின்னு நீங்களா சொன்னா? நாங்க ஒத்துக்க வேண்டாமா?"

"டேய் உனக்கு சமைச்சு போடத்தான உன் அம்மாட்ட ட்ரெய்னிங்லாம்  போனேன்!?"

"அதுனாலதான் எதோ சுமாரா இருக்கு..ம்ம்ம்..எனக்கு ஏன்னு தான் புரிய மாட்டேங்குதுடி..ஒரே ரெசிபி. என் பாட்டி காலத்துல இருந்து. ஆனா என் பாட்டி ஓட ருசி என் அம்மாகிட்ட இல்லை.. என் அம்மாவோட ருசி உன்கிட்ட இல்லை.. ஏன் உங்களுக்கெல்லாம் அந்த பக்குவம் வரல?"

"அது சேரி! என் தாத்தா வைரம்.. என் அப்பா தங்கம்.. நீ பித்தளை.. அது மாதிரிதான்!"

அடுப்பில் தோசைக்கல் தன் கடமையாற்ற தயார்.

"உன் பாட்டி அவ்ளோ நல்லா சமைப்பாங்களா?", என்றாள் திடீரென்று.

"சொத்த எழுதித்தரலாம்.."


"ம்ம்க்கும்.."

தோசை-இரவுகளில், இவள் சுட, சுட அவன் திண்டின் மேல் அமர்ந்து சுடச்சுட சாப்பிடுவது வழக்கம்.

"சாம்பார் வேணுமா வேண்டாமா? சுட பண்ணட்டா?"

ரவி விட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தான்.

"ரவி!" - கலைந்து திரும்பினான்  - "சாம்பார் சுட பண்ணட்டா வேண்டாமா? அது வேண்டாம்னா போடிதான் இருக்கு. ஓகேவா?"

"சாம்பார் இல்லாத தோசையும் கெட்டி சட்னி இல்லாத இட்லியும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை..ப்ளீஸ் சுட வை"

"இப்படி பேசி பேசியே..ஏ..." என்று அவன் காதை திருகி, தலை கோதினாள்.

மீண்டும் விட்டம்...

ஒரு தோசை... மௌனம்... இரண்டாம் தோசை...

"என்ன சார் யோசிக்கறிங்க?"

"என் பாட்டி வைக்கற புளிக்குழம்ப பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்.."

"இன்னுமா?" என்று அவள் கேட்டதை கவனிக்காமல் - 

".. .. என் பாட்டி வீட்டுக்கு போனாலே என்ன சமையல் பண்ணுவான்னு தான் மண்டைக்குள்ள ஓடும்..எழுந்த உடனே ஒரு பில்டர் காபி. அளவா ஒரு டிபன் முடிச்சுட்டு வெட்டியா டி.வீ. பாத்துட்டு இருக்கப்போ என்னென்ன யாராருக்கு வேணுமோ அந்தந்த காய் கறி வாங்கிட்டு வந்துடுவா.. வெல்லம்  வாங்கிட்டு வந்தா  சர்க்கரைப்பொங்கல்... முள்ளங்கி வாங்கிட்டு வந்தா சாம்பார்.. வெண்டைக்காய் வாங்கிட்டு வந்தா.."

"பில்ட்-அப்ப கொரைடா!"


"பொரியலுக்கா? கூட்டுக்கா? பச்சடிக்கா ? குழம்புக்கான்னு குழப்பம் .. நான் நைஸா 'பாட்டி, குழம்புதான?'ன்னு கேட்ருவேன். இல்லைன்னு சொன்னதே இல்லை."

"ம்ம்.."


"மல்லி, கருவேப்பிலை, பூண்டு, பட்டவத்தல், வடகம் போட்டு நல்லெண்ணையில அவ வறுக்கும்போது ஒரு வாசம் வரும் பாரு.. ஐயய்யோ! மூச்சுக்கும் வாசனைக்கும் சண்டை வரும்.,வீடே கம கமன்னு!"

"ச்சை...ஏன்டா மானத்த வாங்கற!?"

"நல்லா வத்த விட்டு சுட சுட அதை சாதத்துல பிசஞ்சு, நல்லெண்ணெய் விட்டு, நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டா.. அடடடடா!! அடுத்த க்ஷணம் அப்படியே செத்து போயிடலாம். நேரா சொர்க்கம்தான்"  - என்று கூறும்போதே வாய் கலங்கியது.. கண் ஊறியது.."ஸ்ஸ்ஸ்ஸ்ல்ரப்" என்று எச்சிலை விழுங்கினான்.

"டேய்.. பேசாம சாப்புடு..!"

"உண்மைதான்..நேரா சொர்க்கம்"

"அட.. இந்த பசங்க கொஞ்சம் சமையல் தெரிஞ்சு வேச்சுக்கிட்டு ரொம்ப ஆட்டம்.."

"ஹலோ..சமையல் பெரிய விஷயமே இல்ல. நீங்கதான் அதுக்கு ஓவரா சீன் போடறிங்க.. எங்களுக்கும் தெரியும்

"என்ன தெரியும்?"

 "பருப்பில்லாத சாம்பார் - ரசம்னும்; பருப்பு போட்ட ரசம் - சாம்பார்ன்னும்.."

"அட ராமா!"

"இந்த புளிக்குழம்புதான் சிக்கலா இருக்கு அந்த பதம். அந்த மனம். வர மாட்டேங்குது."



"டேய் நிம்மதியா சாப்டுடா.. புளிக்குழம்பு வரல..சாம்பார், பருப்புனுட்டு.. எனக்கு ஒரு வண்டி வாங்கணும்ன்னு பிளான் பண்ணோமே அதுக்கு யோசிச்சியா? கொடைக்கானல் போகலாம்ன்னு யோசிச்சோம்.. அதுக்கு பிளான் போட்டியா? செல் போன் பில் கட்டினியா? போன மாசம் பைன் போட்டான் அது என்ன ஏதுனு கேட்டியா?"

"அடடா! அதெல்லாம் காசு குடுத்தா அன்னைக்கே வந்து நிக்கும்மா.. இதெல்லாம் அப்படியா?! உனக்கு எப்போதான் தெரிய போகுதோ?"

அதன் பிறகு இருவரும் உறங்கச்செல்லும் வரை பேசவில்லை. அசௌகர்ய மௌனம். தூக்கத்தில் அணைத்துக்கொண்டாள். அணைக்க விட்டான்.

-------------

மறுநாள் ஒன்றும் நடக்காததுபோல் இருவரும் தமது அலுவலகம் சென்றார்கள்.

ரவிக்கு அன்றும் பாட்டியின் ஞாபகம் அகலவில்லை. ஒரு வேளை வீட்டில் வளர்த்த கருவேப்பிலையா? வெங்காயம் நறுக்கும் விதமா? மில்லில் அரைத்த மிளகாய்த்தூளா? எதிலிருந்து அந்த புளிக்குழம்பு ருசி பெற்றது? அல்லது அவளது கைமணமா? பெண்களின் கைகளுக்கு இயற்கையிலேயே  மணம் உள்ளதா?சொக்கா! பதில் கூறும்!

கம்ப்யூட்டர் மானிட்டரில் கடுகு வெடித்தது.

சதீஷிடம் (ரவியின் மேனேஜர்) அவசர வேலை ஒன்று இருப்பதாய் கூறிவிட்டு கிளம்பினான்.
-------------

வீட்டிர்க்குச் செல்லும் வழியில் அவன் சிறு வயதில் பரிச்சயமான ஒரு மில் இருந்த இடத்திற்கு சென்றான். மில் இல்லை. 'கொஞ்சம் காஸ்ட்லி ஆனா ப்ரெஷ்ஷா இருக்கும்' என்று அடிக்கடி நிரஞ்சனா சொல்லும் நீல்கிரிசிற்கு சென்றான். புளி, தக்காளி, வெங்காயம், பூண்டு, மல்லி விதை என்று அனைத்தையும் ஆர்கானிக்காக வாங்கினான். அவன் தனியாக வந்து கறிகாய் வாங்கி வருடங்கள் ஆகிறது. விலை அவனை மிரட்டியது. மிரட்டலுக்கு அன்று அவன் அஞ்சுவதாய் இல்லை.

-----------

அவன் குர்கானில் தனியே வீடெடுத்த போது  அவன் அம்மா அவனுக்கு எழுதிக்கொடுத்த சமையல் குறிப்பை எதோ ஒரு கம்ப்யூட்டர் தலையணைப் புத்தகத்தின் நடுவிலிருந்து எடுத்தான். ஐந்தாம் பக்கத்தில் பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்தது -

############ ரவியின் பாட்டி ரெசிபி தெரிந்தவர்கள் இதை படிக்கத்தேவை இல்லை. தாவுக. ############



வெண்டைக்காய் புளிக்குழம்பு
============================
1. புளியை வெந்நீரில் ஊரவைத்து கரைத்துக்கொள்ளவும். அதில் மஞ்சள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும் .
2. வெண்டைக்காய் சிறிது சிறிதாக வெட்டி வதக்கவும்.
3. சின்ன வெங்காயம் + தக்காளியை வதக்கி தனியே வைத்துக்கொள்ளவும். சூடு தணிந்ததும் அரைத்துக்கொள்ளவும்.
4. கடுகு, கரிவேப்பிலை மற்றும் பூண்டை லேசாக வதக்கி, அதன் மேல் வதக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்.
5. மேலும் கொஞ்சம் வதங்கியவுடன், புளி கரைசலை சேர்த்து கொஞ்சம் கொதிக்கவிடவும்.
6. அரைத்து வைத்த வெங்காயம் + தக்காளி மிக்ஸ்சை தலையில் தட்டி, போதிய அளவு மஞ்சள், காரப்போடியோடு, சாம்பார் அல்லது குழம்பு மிக்ஸ் சேர்க்கவும்.
7. 3 நிமிடம் கொதிக்கவிட்டு, போதிய அளவு உப்பு சேர்க்கவும்.

#########################################################################################################

கரைத்தான், வதக்கினான், நுகர்ந்தான், கொதிக்கவிட்டான், உப்பு சேர்த்தான், மீண்டும் நுகர்ந்தான், சுவை பார்த்தான், மெய் சிலிர்த்தான்.

இதோடு சேர்த்து உருளைகிழங்கு ப்ரை செய்து முடித்தான்.

---

மணி 3:30 ஆகி இருந்தது. நிரஞ்சனா வருவதற்கு எப்படியும் 7 மணியாவதாகும். அதற்குள் அருகில் இருந்த ஹோண்டா டீலரிடம் சென்று சமீப மாடல்கள் பற்றி கேட்டு வந்தான். 125 cc நிரஞ்சனாவிர்க்கு கொஞ்சம் அதிகம்தான். Test Drive போக வேண்டும் என்று தீர்மானித்தான். Airtel ஆபீசிற்கு சென்று போன மாத பைன் பற்றி விசாரித்தான். Reimburse செய்தார்கள். வீட்டிற்கு வந்து கொடைக்கானல் அஸ்டோரியா ஹோடேலில் ஹோட்டல் புக் செய்தான். காலிங் பெல் அடித்தது. மணி 7:40.

"என்ன சார்.. சீக்கிரம் வந்துட்டிங்க போல..!"

"எஜமானியம்மா நேத்து சொன்ன வேலை எல்லாம் செஞ்சுட்டேன்."

"என்னல்லாம் பன்னிங்க சார்?"

"ஹோண்டா டீலர்கிட்ட பேசினேன்.."

"ம்ம்..", வாட்ச்சை டிவி மேல் வைத்தாள்..

"கொடைக்கானல்ல ரூம் போட்டாச்சு.."

"அட!", ஹாண்ட் பேக்கை சோபா மீது அக்கறையின்றி வைத்தாள்.

"கிரெடிட் கார்டு பில்?"

"போன் கம்பெனிகிட்ட பேசிட்டேன்.. "

"கிரெடிட் கார்டு?"

"அது..வந்து.. சொல்லவே இல்லையே!.. நாளைக்கு..அதெல்லாம் இருக்கட்டும். ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்."

"இவ்ளோ சீக்கிரமாவா?"

"வா.. வா.. ஒரு மேட்டர் இருக்கு!"

சிரித்துக்கொண்டே குளிக்கச்சென்றாள். அவள் ஆடை மாற்றி வருவதற்குள், இவன் தயாரித்த குழம்பு, கிழங்கு, சாதம் அனைத்தயும் மைக்ரோ வேவில் சுட வைத்து உணவு மேஜை மேல் அடுக்கினான். நிருவிர்க்குப்பிடித்த வடுமாங்காவை மறக்காமல் எடுத்து வைத்தான்.

குளித்து வந்தவளின் நாசியில் புளியை குழைத்த மனம்.. பொடியை வறுத்த மனம்.. வெண்டைக்காய் வதக்கும் மனம். கண்கள் விரிய கேட்டாள் -

"ஆஹா! என்னடா சமைச்ச? மனம் தூக்குது!"

"ஹாஹாஹா! என் பாட்டியின் புளிக்குழம்பு ரெசிபி! சுட சுட எடுத்து வெச்சுருக்கேன். சாப்பிடலாம் வா!"

"துறை இததான் பண்ணிட்டு இருந்திங்களா?"

"ய்ய்யா!"

"மணி எட்டரை கூட ஆகல. அதுக்குள்ளே நீ எப்படி சாப்பிடலாம்னு சொல்ற?"

"ரொம்ப நேரம் waiting. பொறுமை இல்லை!"

"சரி சரி.. இரு தண்ணி எடுத்துட்டு வரேன். சாப்பிடலாம். லேப்டாப்ல ஏதாவது போடு. புதுசா.. நீ ரொம்ப நாள் ஆச்சு சமைச்சு.", என்று கூறிக்கொண்டே அடுமனை சென்று தண்ணீர், உப்பு எடுத்து வந்தாள்.

"ஹலோ! உப்புலாம் கரெக்டா இருக்கு!"

"சும்மா எடுத்துட்டு வந்தேன்டா!.. வா சாப்பிடலாம்."

லேப்டாப்பில் ஓடிய சூப்பர் சிங்கரை அவ்வளவாக கவனிக்கவில்லை.

ஆவி பறக்க சாதம் போட்டு, குழம்பை ஊற்றிப் பிசைந்து, நல்லெண்ணெய் கிளறி, உருளைக்கிழங்கை சேர்த்து வாயில் போட்டான்.

"ம்ம்ம்ம்.. சூப்பர் டா!" என்றாள்.

ரவி மெல்லிதாய் சிரித்து ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

மேலும் இரண்டுவாய் சாப்பிட்டுவிட்டு, "டேய் நீ சமைச்சதுலேயே இதுதான் பெஸ்ட்", என்றாள். அமர்ந்துகொண்டே மெலிதாக ஆடினாள். உதட்டோடு சேர்ந்து கண்களும் புன்னகைத்தது.

இவன் ஒன்றும் சொல்லாமல் மேலே சாப்பிட ஆரம்பித்தான்.

"என்னடா ஒன்னுமே சொல்ல மாட்டேங்கற?"

"ம்ம்ம்..."

"ம்ம்ம்.. ன்னா?"

"ஒன்னும் இல்லை.."

"சொல்லுடா", என்று சாபிட்டுக்கொண்டே மூன்று விரல்கள் நீட்டி 'சூப்பர்' என்று சைகித்தாள்.

"சுமாராதான் இருக்கு.. அவ்வளவு நல்லால்லாம் இல்லை."

"அடேய்! நிஜமா சொல்றேன். ரொம்ப நல்லா இருக்கு. காரம், உப்பு, புளி எல்லாமே perfect!"

"நீ சொல்ற.. but நீ என்னோட பாட்டி வெச்ச புளிக்குழம்பு சாப்பிட்டது இல்லை. So உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை..This has no consistency!"

வேகமாய் சவைத்த வாய்.. slow-mo ஆனது. சட்டென்று சுதாரித்து மீண்டும்

"டேய் விடுடா.. டேக் மை போன்.. Instagram ல போட போறேன்!"

"ப்ச்ச்.."

"சீர் அப் டா.. திஸ் இஸ் அமேசிங்!"

"ம்ம்ம்.."

"அதே டேஸ்ட் வருமா என்ன?"

"அதான் ஏன்?"

"டேய் நீ படிச்சவன்தான?.. இப்போ எவ்வளவோ மாறி இருக்கு.. Fertilizers, pollution, GMO, ஏன் - மண்ணு கூட வேற இப்போ. உன் பாட்டி காலத்துல எல்லாமே ப்ரெஷ். இப்போ ஸ்டோர் பண்ணி விக்கறான். Frozen food வந்தாச்சு. இப்போ இவ்ளோ நல்லா வந்ததே பெரிசு.. புரிஞ்சுக்கோ.."

"இல்ல.."



"ரவி.. easy! இட் ஹாப்பன்ஸ். Change is inevitable.  நீதானே சொல்லிகிட்டே இருப்ப? அப்பறம் என்ன? ஒரு போட்டோ எடு. இன்ஸ்டாகிராம்ல போட்டே ஆகணும். மினிமம் 100 லைக்ஸ்! ஐயம் ஸோ ஹாப்பி!"

யோசித்து புன்னகைத்தான். நிரு, ஆனந்தமாக போஸ் குடுக்கத் துவங்கினாள் 

சாப்பிட்டவாறு. கண்கள் மூடி புளிப்பை ரசித்தபடி.  கண்கள் விரிய ஒரு தம்ஸ் அப். நாவை வைத்து உதட்டை சுவைத்தபடி. கிளிக். கிளிக். கிளிக். கிளிக்.

"தமஸ் அப் நல்லா இருக்குல்ல? ஓகே ஐ வில் போஸ்ட் இட்!"
எல்லாம் மாறத்தான் செய்கிறது..பாட்டிகள் வைக்கும் புளிக்குழம்பைத் தவிர எல்லாம் மாறத்தான் செய்கிறது..

                                                              ---------- * -----------

Saturday, September 7, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 21

எல்லா அம்மாக்களுக்கும் 
எட்டிவிடுகிறது நிலவு,
தன் குழந்தைக்கு உணவூட்ட..

நேற்று உண்ட நிலவை 
இட்லியென்றொ, 
தச்சி மம்மு என்றோ, 
லாக்டோஜன் என்றோ,


உணரும் தருணம் 
தொலைந்து விடுகிறது - நிலவோடு சேர்ந்து 
குழந்தையும்..

அம்மாக்களுக்கு மட்டும்,
எப்போதும் நிலவு,
எட்டிவிடும் தூரத்தில்..

Tuesday, September 3, 2013

ஒரு வரி விமர்சனம்: தங்க மீன்கள்







தங்க மீன்கள் - வெறும் கவரிங்!
தன் இயலாமையை உணராமல் வெற்றி பெறும் சமூகத்தின் மீது பழி சொல்லும் இடதுசாரி சிந்தனையின் கதைப்படம்.

Wednesday, July 24, 2013

Monday, January 28, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 17

"இரு இரு..", என்றது 
இலை..
"இதோ - இரண்டே நிமிடத்தில்
இடைஞ்சல் களைகிறேன்.."

"விடு விடு..", என்றது 
வானம்..
"விருட்டென்று கொஞ்சம் 
சிவந்து கொள்கிறேன்..."

"பொறு பொறு..",என்றது 
ஆறு..
"சற்றே பொறுத்திரு 
இசைந்து தவழ்கிறேன்.."

சிடு சிடு - த்தது  
சூரியன்...
"ஒரே நொடியில் 
மங்கி மிளிர்கிறேன்.."

அலைகள் இல்லாத 
கவலையில், காற்றை 
"கொடு.. கொடு" என்றது 
கடல்..

காற்று தந்த அலையை 
தன்னை 
"தொடு தொடு" என்றது 
கரை 

அலங்கார சடங்குகள் எதிலும் 
அசராமல், என்னை  
"எடு எடு" என்றது 
மலை..

.....





புகைப்படங்களில் அடைக்கப்படும் முன் 
இலைகளுக்கோ 
மலைகளுக்கோ 
நதிகளுக்கோ 
மேகங்களுக்கோ 

யாரேனும் 
புன்னகைக்க அவகாசம் கொடுத்தீர்களா?



Monday, January 14, 2013

ஹைக்கு - 2





அமெரிக்க மார்கழி 

ஜில்லேனக்காற்று 

இலையில்லா மரம்..

Friday, January 4, 2013

புலனடக்கம்


வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
கூழாங்கற்கள் சேமிக்கத்தொடங்கினேன் ..

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது மேகம்..

உள்ளங்கைக் குழியில் 
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி..

உதறிய சிகரெட்டின் 
சிணுகும் கங்கில் 
சிதறி விழுகிறது சூரியன்..

















தனது 
மிச்சத்தை எப்போதும்
குச்சிகளில் விட்டுவைக்கிறது
மரம்...

அதேபோல்..

உருட்டித்திரட்டி 
நீரில் உலுக்கி 
படுவிக்கிடக்கும் கூழாங்கற்களில் 
பிண்டமாய் கிடக்கிறது அண்டம்  
...

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ள
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்பும் சலிப்புமாய் 
சில நினைவுகளைத் தவிர..
......
......
......
......
......
வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
மரக்குச்சிகள் சேமிக்கத்தொடங்கினேன் ..


Saturday, December 22, 2012

Tuesday, November 6, 2012

Tuesday, September 4, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 15







உன் பிள்ளை மண்ணை உண்டால் 
உடனே வாயை திறக்கச்சொல்..

வையகம் தெரியாவிடில்
ஐயமே இல்லை..
நீ யசோதை இல்லை!

Friday, August 31, 2012

குட்டிக்கதை - 1



 பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த என் மகன், மருமகள் பேரனோடு கோவிலுக்குச்சென்றிருன்தேன். சன்னதியில் அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது.

"தாத்தா வாட்ஸ் ஹாப்பனிங்?"

"வின்னி.. ஷூ..சும்மா இரு" என்றாள் என் மருமகள்.

"இருக்கட்டும்மா..இதெல்லாம் எப்போ பாக்க போறான். கேக்கட்டும்.. வின்னி கண்ணா. நாமல்லாம் டெய்லி குளிக்கற மாதிரி கடவுளும் குளிக்க வேண்டாமா. அதான் பண்றாங்க."

"வாட்ஸ் தட் யெல்லோ லிக்விட்?"

                               

"தட்ஸ் கால்ட் டர்மரிக். நாம சோப்பு போடறோம் இல்ல? அது மாதிரி."

அபிஷேகம் முடிந்து அலங்காரத்திர்க்காக திரையை மூடினார்கள். 

"இப்போ வாட்ஸ் ஹாப்பனிங்?"

"டேய் வின்னி லீவ் தாத்தா அலோன்"

"இருடா கேட்டுட்டு போறான்.. வின்னி.. கடவுள் குளிச்சார்ல. இப்போ அவங்கள்ளாம் அவருக்கு அலங்காரம் பண்றாங்க.."

"வாட்ஸ் அலங்காரம்?"

"அலங்காரம் இஸ்... டெக்கரேஷன்..."

"டெக்கரேஷன்?"

"வின்னி டிரஸ் போட்டு விடறாங்க.. நவ் தட்ஸ் எனப்.. அப்பா இவன் இப்படித்தான்.. நீங்க பேச பேச அவனும் கேள்வி கேட்டுட்டே இருப்பான்.."

வின்னியின் முகத்தில் எதோ ஒரு கேள்வி மிச்சம் இருந்தது. நான் என் மகனை பொருட்படுத்தாமல், "என்ன கண்ணா?" என்றேன்.

"இட்ஸ் ஸ்டுபிட்! தே லெட் அஸ் வாட்ச் ஹிம் டேக் பாத். பட் வோண்ட் லெட் அஸ் வாட்ச் ஹிம் டிரஸ்?"

திரை விலகியது.

Tuesday, August 14, 2012

கற்றதும் பெற்றதும்..

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.


நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.

"எதுக்குப்பா?"

"தொடுங்களேன்!"

சற்று வியப்புடன் தொட்டார்.

"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத்தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."

"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.

அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"

"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.





மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromise.. (படிப்படியான சமரசங்களால் ஆனது).

 சுஜாதா