Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, September 4, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 20


சுடும் வெயிலை
சகித்துக்கொள்ளலாம் 

கொட்டும் மழையில் 
நனைந்தும் விடலாம்..

இந்த பாழாய்ப்போன 
தூரலைத்தான் 
என்ன செய்ய? தெரியவில்லை..

Friday, January 4, 2013

புலனடக்கம்


வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
கூழாங்கற்கள் சேமிக்கத்தொடங்கினேன் ..

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது மேகம்..

உள்ளங்கைக் குழியில் 
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி..

உதறிய சிகரெட்டின் 
சிணுகும் கங்கில் 
சிதறி விழுகிறது சூரியன்..

















தனது 
மிச்சத்தை எப்போதும்
குச்சிகளில் விட்டுவைக்கிறது
மரம்...

அதேபோல்..

உருட்டித்திரட்டி 
நீரில் உலுக்கி 
படுவிக்கிடக்கும் கூழாங்கற்களில் 
பிண்டமாய் கிடக்கிறது அண்டம்  
...

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ள
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்பும் சலிப்புமாய் 
சில நினைவுகளைத் தவிர..
......
......
......
......
......
வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
மரக்குச்சிகள் சேமிக்கத்தொடங்கினேன் ..


Monday, August 13, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 13




கீழே ஒரு நீள் செவ்வகம் விட்டு,
மேலிருக்கும் இரு 
முனைகளிலும் 
முக்கோணம் செய்து..

விடப்பட்ட செவ்வகத்தை இரு புறமும்
நூற்றெண்பது டிகிரி மடக்கி,
நீட்டி நிற்கும் தாளினை மீண்டும்  மடக்கி,
சதுரமாக்கி..




பாதியை மடக்கி,
மீதியை பின் மடக்கி,
மேலும் மடக்கி,
கீழும் மடக்கி,
விரித்து - ஒரு வழியாக 

கப்பலாகிப் போன
டைரியின் நடுப்பக்கத்தில்
என்ன எழுதப்பட்டிருக்கும்
இப்பெருமழை பெய்திருக்காவிடில்?