Thursday, May 7, 2015

வெண்டைக்காய் புளிக்குழம்பு - சிறு கதை | Vendaikkaai PuLikkuzhambu - Tamil Short story


ஆடம்பரங்களுக்கும், அத்தியாவசியங்களுக்கும் அனாவசியங்களுக்கும் வித்யாசம் தெரியாமல் தத்தளிக்கும் தம்பதிகளின் ஜன சந்தையில் புதிதாய் சேர்ந்தவர்கள் ரவியும் நிரஞ்சனாவும். தமிழ் மேட்ரிமோனியில் பல 'கிளிக்'குகளுக்குப்பிறகு, முதல் உரையாடலிலேயே லேசாய் பிடித்துப்போய், பிடிக்காமல் போக அவகாசம் அளிக்காமல் தடாலென திருமணம் முடித்தவர்கள்.  இன்று வரை லேசாய் பிடித்திருப்பது - ஆச்சர்யம்..

 அடர்த்தியான சீராய் ட்ரிம்  செய்த  மீசை, 6 அடி, கோதுமை நிறம், கச்சித உடல், நேற்றித்தழும்பு, ஸ்லீவ்லெஸ்/ஷார்ட்ஸ், ரஹ்மான், எப்போதாவது சரக்கு பார்ட்டி,ரூபிக்ஸ் கியூப், செஸ், ஈ.எஸ்.பீ.என்., கிரிக்கெட் -  ரவி.

மைதா நிறம், பக்க  வகுடு, நெற்றிக்குங்குமம், விண்டோ ஷாப்பிங், சுடிதார், பீச், மிளகாய் பஜ்ஜி, மாவடு, வேலை, சுத்தமான வீடு, ரவி..ரவி..ரவி  - நிரஞ்சனா. 

2BHK வாடகை பிளாட், படுக்கை அறை A/C, வாரம் ஒரு முறை மரினா, நல்ல திரைஅரங்கில் ஒரு படம், அவ்வப்போது ரெஸ்டாரன்ட் , கொஞ்சம் சேமிப்பு, சில்லறை கோபங்கள், சமாதானங்கள் என்று இயல்பாய் வாழும், இன்னும் புதிதாய் இருக்கும் இளைஞர்கள். 

அசோக் - இவர்கள் இருவருக்கும் நண்பன். ஒரு சனிக்கிழமை மாலை ரவியிடம் எதோ பேச வேண்டும் என்று வந்திருந்தான். வந்ததிலிருந்துபெரிதாய் ஒன்றும் பேசவில்லை. வெகு நேரம் கழித்து நிரஞ்சனா குடுத்த காபியை ஒரு சிப் சிப்பிவிட்டு - 

"இது, காபி..இது?.." என்று ரவியைப்பார்த்து கேட்டான்.

ரவி என்ன சொல்வதென்று தெரியாமல் வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கையில்

"...காபி..." -என்று முடித்தான்,  கோபத்தோடும் விரக்தியோடும்.
"என்னடி சொல்றான்?", என்றன ரவியின் கண்கள். "என்னை கேட்டா?" என்றது நிருவின் பிதுங்கிய வாய்.


"என்னடா ஆச்சு? எதோ பேசணும்ன்னு சொன்ன?

"டேய்..என் பொண்டாட்டி மண்ணு மாதிரி சமைக்கராடா!", என்றான். 

"எனக்கு புரியல... கொஞ்சம் நிதானமா சொல்லு "

"உனக்கு எப்படிடா புரியும்.. நிரஞ்சனாதான் நல்லா சமைக்கராங்களே!"

"என்னடா ஆச்சு?"

"சிஸ்டர்..நீங்களே சொல்லுங்க. ஒரு மனுஷன் வீட்டுக்கு நாயா வேலை பாத்துட்டு வர்றான். வர்றவனுக்கு வாய்லயே வைக்க முடியாத மாதிரி சமைச்சு போட்டா என்ன பண்ணுவான்? கோவம் வராதா?"

ரவியும் நிரஞ்சனாவும் அவன் மேலும் தொடர அமைதியாய் இருந்தார்கள்.

"ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல. டெய்லி உப்பு சப்பு இல்லாம சாப்படனும்னா நான் என்னதான் பண்றது? தோசை செஞ்சா புளிக்குது.. இட்லி செஞ்சா கல்லு மாதிரி இருக்கு. உப்புமா செஞ்சா வேகாம இருக்கு. சாதம் கொழயுது.. சாம்பாருக்கு பதிலா நெஜம்மாவே மண்ண சாப்டலாம். அதையாவது  மண்ணுன்னு தெரிஞ்சு சாப்பிடுவோம். இது ஏமாத்து வேலை! எப்படி 'அப்படி' ஒரு சாம்பார் பண்ண முடியுதுன்னு தெரியலை..பண்ணி அவளே எப்படி சாப்பிடுறான்னும் தெரியலை. ரவி, நீயெல்லாம் சாப்பிட்டேன்னா ஹாஸ்பிட்டல்ல   அட்மிட் ஆகிடுவ! டெய்லி வெளில சாப்பிட முடியுமாடா?"

"ஹோட்டல்லயா டெய்லி?"

"ஹோட்டல்லயாவது டெய்லி..!"

ரவிக்கு ஓரளவு புரிந்தாலும் இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. 

நிரஞ்சனா கொஞ்சம் மௌனம் கழித்து நிதானமாக ,"அட்லீஸ்ட் ட்ரை பண்றாங்களா?"

"தெரியல சிஸ்டர். எனக்கு புடிச்சுருக்கா புடிக்கலையா ஒண்ணுமே கண்டுக்கற மாதிரி தெரியலை..."

"சமையலுக்கு ஆள் வேச்சுக்கோயேண்டா?"

"ஆள் புடிச்சு தரியா?"

"இத பேசத்தான் வந்தியா?"

"அது கெடக்கு!! பொலப்பத்த கேளுடா! டேய், நான் பொண்டாட்டி கையால சாப்பிடனும்ன்னு நினைக்கறது தப்பா? பொண்ணு பாக்க போறப்போ சமைச்சு காமின்னா சொல்ல முடியும்?"

"சொல்லலாம்...!"

"நீ சொன்னியா?!"

"இல்லடா.. சொல்லலாம்ன்னு சொல்றேன்.. பசங்களுக்கு  கொஞ்சம் இளகுன மனசுடா.. சிரிச்சு பேசினாலே தலை ஆட்டிடறோம் .. என் அபீஸ்ல ஒரு பொண்ணு, ஒரு பையன ரிஜெக்ட்  பண்ணிட்டா . ஏன்ன்னு கேட்டா, ரொம்ப நல்லவனா இருக்கான்ன்னு சொல்றா ."

"அது சரி.." என்று சன்னமாக சிரித்தான்.

அவனை கொஞ்சம் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். அவன் பேசவேண்டும் என்று வந்த விஷயம் பற்றி பேசாமலேயே சென்றான். சமையலுக்கு ஆள் தேவை விளம்பரம் நாளை தினமணியில் வரும். உங்களுக்கு யாரையாவது தெரிந்தால் 9098767890க்கு அழைக்க சொல்லுங்கள். பாவம்.

                                                                   * * *

அன்று இரவு - 

"கீதா அவ்வளவு மோசமாவா சமைப்பாங்க?"

"தெரியலையே.. ஒருத்தன் இவ்வளவு நொந்து போயிருக்கான்னா மோசமாத்தான இருக்கணும்?"

"ம்ம்.."

"சரி..வெளியில போய் சாப்பிடலாமா?"

"வீட்ல பழசு நிறையா இருக்குடா."

"நல்ல்லா மொரு மொருன்னு தோசை சாபடனும் போல இருக்கு..ப்ளீஸ்!"

"நான் சுட்டு தர்ரேன்.. சாம்பார் எப்படியும் காலி பண்ணனும். நாளைக்கு வரைக்கும் தாங்காது."

"நான் மொரு மொருன்னு சொன்னேன்.. உனக்கு அது வராது. நாளைக்கு ஆபீஸ்க்கு குடுத்து விடு. கடமை தவறாத கணவனா சாப்டுர்றேன்."

"அதெல்லாம் நல்லாத்தான் வரும்.முந்தாநாள்தான் போனோம். அதுக்குள்ள என்ன? என் தோசை போதும் இன்னைக்கு...அதெல்லாம் சரி..நீ அசோக் மாதிரி இப்படியெல்லாம் வெளில யார்டயாது போய் சொன்னன்னு தெரிஞ்சுது.."

"ச்ச..ச்ச.. உனக்கு என்ன. ஓரளவு சுமாரா..."

முறைத்..

".. நல்லாவே சமைக்கற. இன்னும் கொஞ்ச நாள்ல பக்குவம் வந்துடும்.."

...துக்கொண்டே, "ஏன் சொல்ல மாட்ட.. உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாலும் இப்படிதான் பேசுவிங்க.."

"வாய்ல வைக்கற மாதிரி சமைக்கறதே இந்த காலத்து பொண்ணுங்களுக்கு பெரிய விஷயம்... ருசின்னு நீங்களா சொன்னா? நாங்க ஒத்துக்க வேண்டாமா?"

"டேய் உனக்கு சமைச்சு போடத்தான உன் அம்மாட்ட ட்ரெய்னிங்லாம்  போனேன்!?"

"அதுனாலதான் எதோ சுமாரா இருக்கு..ம்ம்ம்..எனக்கு ஏன்னு தான் புரிய மாட்டேங்குதுடி..ஒரே ரெசிபி. என் பாட்டி காலத்துல இருந்து. ஆனா என் பாட்டி ஓட ருசி என் அம்மாகிட்ட இல்லை.. என் அம்மாவோட ருசி உன்கிட்ட இல்லை.. ஏன் உங்களுக்கெல்லாம் அந்த பக்குவம் வரல?"

"அது சேரி! என் தாத்தா வைரம்.. என் அப்பா தங்கம்.. நீ பித்தளை.. அது மாதிரிதான்!"

அடுப்பில் தோசைக்கல் தன் கடமையாற்ற தயார்.

"உன் பாட்டி அவ்ளோ நல்லா சமைப்பாங்களா?", என்றாள் திடீரென்று.

"சொத்த எழுதித்தரலாம்.."


"ம்ம்க்கும்.."

தோசை-இரவுகளில், இவள் சுட, சுட அவன் திண்டின் மேல் அமர்ந்து சுடச்சுட சாப்பிடுவது வழக்கம்.

"சாம்பார் வேணுமா வேண்டாமா? சுட பண்ணட்டா?"

ரவி விட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தான்.

"ரவி!" - கலைந்து திரும்பினான்  - "சாம்பார் சுட பண்ணட்டா வேண்டாமா? அது வேண்டாம்னா போடிதான் இருக்கு. ஓகேவா?"

"சாம்பார் இல்லாத தோசையும் கெட்டி சட்னி இல்லாத இட்லியும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை..ப்ளீஸ் சுட வை"

"இப்படி பேசி பேசியே..ஏ..." என்று அவன் காதை திருகி, தலை கோதினாள்.

மீண்டும் விட்டம்...

ஒரு தோசை... மௌனம்... இரண்டாம் தோசை...

"என்ன சார் யோசிக்கறிங்க?"

"என் பாட்டி வைக்கற புளிக்குழம்ப பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்.."

"இன்னுமா?" என்று அவள் கேட்டதை கவனிக்காமல் - 

".. .. என் பாட்டி வீட்டுக்கு போனாலே என்ன சமையல் பண்ணுவான்னு தான் மண்டைக்குள்ள ஓடும்..எழுந்த உடனே ஒரு பில்டர் காபி. அளவா ஒரு டிபன் முடிச்சுட்டு வெட்டியா டி.வீ. பாத்துட்டு இருக்கப்போ என்னென்ன யாராருக்கு வேணுமோ அந்தந்த காய் கறி வாங்கிட்டு வந்துடுவா.. வெல்லம்  வாங்கிட்டு வந்தா  சர்க்கரைப்பொங்கல்... முள்ளங்கி வாங்கிட்டு வந்தா சாம்பார்.. வெண்டைக்காய் வாங்கிட்டு வந்தா.."

"பில்ட்-அப்ப கொரைடா!"


"பொரியலுக்கா? கூட்டுக்கா? பச்சடிக்கா ? குழம்புக்கான்னு குழப்பம் .. நான் நைஸா 'பாட்டி, குழம்புதான?'ன்னு கேட்ருவேன். இல்லைன்னு சொன்னதே இல்லை."

"ம்ம்.."


"மல்லி, கருவேப்பிலை, பூண்டு, பட்டவத்தல், வடகம் போட்டு நல்லெண்ணையில அவ வறுக்கும்போது ஒரு வாசம் வரும் பாரு.. ஐயய்யோ! மூச்சுக்கும் வாசனைக்கும் சண்டை வரும்.,வீடே கம கமன்னு!"

"ச்சை...ஏன்டா மானத்த வாங்கற!?"

"நல்லா வத்த விட்டு சுட சுட அதை சாதத்துல பிசஞ்சு, நல்லெண்ணெய் விட்டு, நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டா.. அடடடடா!! அடுத்த க்ஷணம் அப்படியே செத்து போயிடலாம். நேரா சொர்க்கம்தான்"  - என்று கூறும்போதே வாய் கலங்கியது.. கண் ஊறியது.."ஸ்ஸ்ஸ்ஸ்ல்ரப்" என்று எச்சிலை விழுங்கினான்.

"டேய்.. பேசாம சாப்புடு..!"

"உண்மைதான்..நேரா சொர்க்கம்"

"அட.. இந்த பசங்க கொஞ்சம் சமையல் தெரிஞ்சு வேச்சுக்கிட்டு ரொம்ப ஆட்டம்.."

"ஹலோ..சமையல் பெரிய விஷயமே இல்ல. நீங்கதான் அதுக்கு ஓவரா சீன் போடறிங்க.. எங்களுக்கும் தெரியும்

"என்ன தெரியும்?"

 "பருப்பில்லாத சாம்பார் - ரசம்னும்; பருப்பு போட்ட ரசம் - சாம்பார்ன்னும்.."

"அட ராமா!"

"இந்த புளிக்குழம்புதான் சிக்கலா இருக்கு அந்த பதம். அந்த மனம். வர மாட்டேங்குது."



"டேய் நிம்மதியா சாப்டுடா.. புளிக்குழம்பு வரல..சாம்பார், பருப்புனுட்டு.. எனக்கு ஒரு வண்டி வாங்கணும்ன்னு பிளான் பண்ணோமே அதுக்கு யோசிச்சியா? கொடைக்கானல் போகலாம்ன்னு யோசிச்சோம்.. அதுக்கு பிளான் போட்டியா? செல் போன் பில் கட்டினியா? போன மாசம் பைன் போட்டான் அது என்ன ஏதுனு கேட்டியா?"

"அடடா! அதெல்லாம் காசு குடுத்தா அன்னைக்கே வந்து நிக்கும்மா.. இதெல்லாம் அப்படியா?! உனக்கு எப்போதான் தெரிய போகுதோ?"

அதன் பிறகு இருவரும் உறங்கச்செல்லும் வரை பேசவில்லை. அசௌகர்ய மௌனம். தூக்கத்தில் அணைத்துக்கொண்டாள். அணைக்க விட்டான்.

-------------

மறுநாள் ஒன்றும் நடக்காததுபோல் இருவரும் தமது அலுவலகம் சென்றார்கள்.

ரவிக்கு அன்றும் பாட்டியின் ஞாபகம் அகலவில்லை. ஒரு வேளை வீட்டில் வளர்த்த கருவேப்பிலையா? வெங்காயம் நறுக்கும் விதமா? மில்லில் அரைத்த மிளகாய்த்தூளா? எதிலிருந்து அந்த புளிக்குழம்பு ருசி பெற்றது? அல்லது அவளது கைமணமா? பெண்களின் கைகளுக்கு இயற்கையிலேயே  மணம் உள்ளதா?சொக்கா! பதில் கூறும்!

கம்ப்யூட்டர் மானிட்டரில் கடுகு வெடித்தது.

சதீஷிடம் (ரவியின் மேனேஜர்) அவசர வேலை ஒன்று இருப்பதாய் கூறிவிட்டு கிளம்பினான்.
-------------

வீட்டிர்க்குச் செல்லும் வழியில் அவன் சிறு வயதில் பரிச்சயமான ஒரு மில் இருந்த இடத்திற்கு சென்றான். மில் இல்லை. 'கொஞ்சம் காஸ்ட்லி ஆனா ப்ரெஷ்ஷா இருக்கும்' என்று அடிக்கடி நிரஞ்சனா சொல்லும் நீல்கிரிசிற்கு சென்றான். புளி, தக்காளி, வெங்காயம், பூண்டு, மல்லி விதை என்று அனைத்தையும் ஆர்கானிக்காக வாங்கினான். அவன் தனியாக வந்து கறிகாய் வாங்கி வருடங்கள் ஆகிறது. விலை அவனை மிரட்டியது. மிரட்டலுக்கு அன்று அவன் அஞ்சுவதாய் இல்லை.

-----------

அவன் குர்கானில் தனியே வீடெடுத்த போது  அவன் அம்மா அவனுக்கு எழுதிக்கொடுத்த சமையல் குறிப்பை எதோ ஒரு கம்ப்யூட்டர் தலையணைப் புத்தகத்தின் நடுவிலிருந்து எடுத்தான். ஐந்தாம் பக்கத்தில் பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்தது -

############ ரவியின் பாட்டி ரெசிபி தெரிந்தவர்கள் இதை படிக்கத்தேவை இல்லை. தாவுக. ############



வெண்டைக்காய் புளிக்குழம்பு
============================
1. புளியை வெந்நீரில் ஊரவைத்து கரைத்துக்கொள்ளவும். அதில் மஞ்சள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும் .
2. வெண்டைக்காய் சிறிது சிறிதாக வெட்டி வதக்கவும்.
3. சின்ன வெங்காயம் + தக்காளியை வதக்கி தனியே வைத்துக்கொள்ளவும். சூடு தணிந்ததும் அரைத்துக்கொள்ளவும்.
4. கடுகு, கரிவேப்பிலை மற்றும் பூண்டை லேசாக வதக்கி, அதன் மேல் வதக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்.
5. மேலும் கொஞ்சம் வதங்கியவுடன், புளி கரைசலை சேர்த்து கொஞ்சம் கொதிக்கவிடவும்.
6. அரைத்து வைத்த வெங்காயம் + தக்காளி மிக்ஸ்சை தலையில் தட்டி, போதிய அளவு மஞ்சள், காரப்போடியோடு, சாம்பார் அல்லது குழம்பு மிக்ஸ் சேர்க்கவும்.
7. 3 நிமிடம் கொதிக்கவிட்டு, போதிய அளவு உப்பு சேர்க்கவும்.

#########################################################################################################

கரைத்தான், வதக்கினான், நுகர்ந்தான், கொதிக்கவிட்டான், உப்பு சேர்த்தான், மீண்டும் நுகர்ந்தான், சுவை பார்த்தான், மெய் சிலிர்த்தான்.

இதோடு சேர்த்து உருளைகிழங்கு ப்ரை செய்து முடித்தான்.

---

மணி 3:30 ஆகி இருந்தது. நிரஞ்சனா வருவதற்கு எப்படியும் 7 மணியாவதாகும். அதற்குள் அருகில் இருந்த ஹோண்டா டீலரிடம் சென்று சமீப மாடல்கள் பற்றி கேட்டு வந்தான். 125 cc நிரஞ்சனாவிர்க்கு கொஞ்சம் அதிகம்தான். Test Drive போக வேண்டும் என்று தீர்மானித்தான். Airtel ஆபீசிற்கு சென்று போன மாத பைன் பற்றி விசாரித்தான். Reimburse செய்தார்கள். வீட்டிற்கு வந்து கொடைக்கானல் அஸ்டோரியா ஹோடேலில் ஹோட்டல் புக் செய்தான். காலிங் பெல் அடித்தது. மணி 7:40.

"என்ன சார்.. சீக்கிரம் வந்துட்டிங்க போல..!"

"எஜமானியம்மா நேத்து சொன்ன வேலை எல்லாம் செஞ்சுட்டேன்."

"என்னல்லாம் பன்னிங்க சார்?"

"ஹோண்டா டீலர்கிட்ட பேசினேன்.."

"ம்ம்..", வாட்ச்சை டிவி மேல் வைத்தாள்..

"கொடைக்கானல்ல ரூம் போட்டாச்சு.."

"அட!", ஹாண்ட் பேக்கை சோபா மீது அக்கறையின்றி வைத்தாள்.

"கிரெடிட் கார்டு பில்?"

"போன் கம்பெனிகிட்ட பேசிட்டேன்.. "

"கிரெடிட் கார்டு?"

"அது..வந்து.. சொல்லவே இல்லையே!.. நாளைக்கு..அதெல்லாம் இருக்கட்டும். ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்."

"இவ்ளோ சீக்கிரமாவா?"

"வா.. வா.. ஒரு மேட்டர் இருக்கு!"

சிரித்துக்கொண்டே குளிக்கச்சென்றாள். அவள் ஆடை மாற்றி வருவதற்குள், இவன் தயாரித்த குழம்பு, கிழங்கு, சாதம் அனைத்தயும் மைக்ரோ வேவில் சுட வைத்து உணவு மேஜை மேல் அடுக்கினான். நிருவிர்க்குப்பிடித்த வடுமாங்காவை மறக்காமல் எடுத்து வைத்தான்.

குளித்து வந்தவளின் நாசியில் புளியை குழைத்த மனம்.. பொடியை வறுத்த மனம்.. வெண்டைக்காய் வதக்கும் மனம். கண்கள் விரிய கேட்டாள் -

"ஆஹா! என்னடா சமைச்ச? மனம் தூக்குது!"

"ஹாஹாஹா! என் பாட்டியின் புளிக்குழம்பு ரெசிபி! சுட சுட எடுத்து வெச்சுருக்கேன். சாப்பிடலாம் வா!"

"துறை இததான் பண்ணிட்டு இருந்திங்களா?"

"ய்ய்யா!"

"மணி எட்டரை கூட ஆகல. அதுக்குள்ளே நீ எப்படி சாப்பிடலாம்னு சொல்ற?"

"ரொம்ப நேரம் waiting. பொறுமை இல்லை!"

"சரி சரி.. இரு தண்ணி எடுத்துட்டு வரேன். சாப்பிடலாம். லேப்டாப்ல ஏதாவது போடு. புதுசா.. நீ ரொம்ப நாள் ஆச்சு சமைச்சு.", என்று கூறிக்கொண்டே அடுமனை சென்று தண்ணீர், உப்பு எடுத்து வந்தாள்.

"ஹலோ! உப்புலாம் கரெக்டா இருக்கு!"

"சும்மா எடுத்துட்டு வந்தேன்டா!.. வா சாப்பிடலாம்."

லேப்டாப்பில் ஓடிய சூப்பர் சிங்கரை அவ்வளவாக கவனிக்கவில்லை.

ஆவி பறக்க சாதம் போட்டு, குழம்பை ஊற்றிப் பிசைந்து, நல்லெண்ணெய் கிளறி, உருளைக்கிழங்கை சேர்த்து வாயில் போட்டான்.

"ம்ம்ம்ம்.. சூப்பர் டா!" என்றாள்.

ரவி மெல்லிதாய் சிரித்து ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

மேலும் இரண்டுவாய் சாப்பிட்டுவிட்டு, "டேய் நீ சமைச்சதுலேயே இதுதான் பெஸ்ட்", என்றாள். அமர்ந்துகொண்டே மெலிதாக ஆடினாள். உதட்டோடு சேர்ந்து கண்களும் புன்னகைத்தது.

இவன் ஒன்றும் சொல்லாமல் மேலே சாப்பிட ஆரம்பித்தான்.

"என்னடா ஒன்னுமே சொல்ல மாட்டேங்கற?"

"ம்ம்ம்..."

"ம்ம்ம்.. ன்னா?"

"ஒன்னும் இல்லை.."

"சொல்லுடா", என்று சாபிட்டுக்கொண்டே மூன்று விரல்கள் நீட்டி 'சூப்பர்' என்று சைகித்தாள்.

"சுமாராதான் இருக்கு.. அவ்வளவு நல்லால்லாம் இல்லை."

"அடேய்! நிஜமா சொல்றேன். ரொம்ப நல்லா இருக்கு. காரம், உப்பு, புளி எல்லாமே perfect!"

"நீ சொல்ற.. but நீ என்னோட பாட்டி வெச்ச புளிக்குழம்பு சாப்பிட்டது இல்லை. So உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை..This has no consistency!"

வேகமாய் சவைத்த வாய்.. slow-mo ஆனது. சட்டென்று சுதாரித்து மீண்டும்

"டேய் விடுடா.. டேக் மை போன்.. Instagram ல போட போறேன்!"

"ப்ச்ச்.."

"சீர் அப் டா.. திஸ் இஸ் அமேசிங்!"

"ம்ம்ம்.."

"அதே டேஸ்ட் வருமா என்ன?"

"அதான் ஏன்?"

"டேய் நீ படிச்சவன்தான?.. இப்போ எவ்வளவோ மாறி இருக்கு.. Fertilizers, pollution, GMO, ஏன் - மண்ணு கூட வேற இப்போ. உன் பாட்டி காலத்துல எல்லாமே ப்ரெஷ். இப்போ ஸ்டோர் பண்ணி விக்கறான். Frozen food வந்தாச்சு. இப்போ இவ்ளோ நல்லா வந்ததே பெரிசு.. புரிஞ்சுக்கோ.."

"இல்ல.."



"ரவி.. easy! இட் ஹாப்பன்ஸ். Change is inevitable.  நீதானே சொல்லிகிட்டே இருப்ப? அப்பறம் என்ன? ஒரு போட்டோ எடு. இன்ஸ்டாகிராம்ல போட்டே ஆகணும். மினிமம் 100 லைக்ஸ்! ஐயம் ஸோ ஹாப்பி!"

யோசித்து புன்னகைத்தான். நிரு, ஆனந்தமாக போஸ் குடுக்கத் துவங்கினாள் 

சாப்பிட்டவாறு. கண்கள் மூடி புளிப்பை ரசித்தபடி.  கண்கள் விரிய ஒரு தம்ஸ் அப். நாவை வைத்து உதட்டை சுவைத்தபடி. கிளிக். கிளிக். கிளிக். கிளிக்.

"தமஸ் அப் நல்லா இருக்குல்ல? ஓகே ஐ வில் போஸ்ட் இட்!"
எல்லாம் மாறத்தான் செய்கிறது..பாட்டிகள் வைக்கும் புளிக்குழம்பைத் தவிர எல்லாம் மாறத்தான் செய்கிறது..

                                                              ---------- * -----------

Saturday, May 2, 2015

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 23





'ஆவின்' பால் கிடைப்பதால்தான் 
அன்பு செலுத்துகிறோமோ 
ஆவின் பால்?

[கமல் படம் பார்த்துவிட்டு வாலி ஸ்டைலில் கவிதை..]

உத்தம வில்லன் - விமர்சனம் | Uthama Villain | Uttama Villain Movie review.

(... pssst - created a Meme for the first time for a movie review! Meme at the end of the post.)

நான் மிகத்தீவிரமான கமல் ரசிகன். விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு காசோலை அனுப்ப எத்தனித்தவர்களில் நானும் ஒருவன். விஸ்வரூபம் படம் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்தப்படத்தையும் திரை அரங்குகளில் பார்க்காமல் ஒரே வாரத்தில் 4 முறை பார்த்தவன். 

... என்னைப்போல் பலர் உள்ளனர்.

சியாட்டிலில் நகரின் ராக்ஸி சினிமாவில் (Roxy Cinema) இன்றிரவு உத்தம வில்லன் படம் பார்த்தேன். ரமேஷ் அரவிந்த் இயக்கம், படம் மொக்கை என்று சில விமர்சனங்கள், தசாவதாரத்தை நினைவூட்டிய முன்னோட்டம் - இவை அனைத்தையும் தாண்டி கமல் மீதிருக்கும் நம்பிக்கையில் படம் பார்க்கச்சென்றேன். 

நான்கு ஆண்டிற்கு ஒருமுறை தன் ரசிகர்களை சோதித்துப் பார்ப்பதில் கமலுக்கு அலாதி பிரியம் போலும். மும்பை எக்ஸ்பிரஸ்சில் ஆரம்பித்த இந்த விஷப்பரீட்சை - மன்மதன் அம்பு, உன்னைப்போல் ஒருவன் என்று நீண்டு - இப்போது உத்தம வில்லனில் உச்சம் தொடுகிறது.

மனோரஞ்சன்ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு வாழ்க்கையில் அதி தீவிரமாக ஒரு பிரச்சனை. தான் முன் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளவும், நன்றி சொல்லவும், நன்றிக்கடன் செலுத்தவும், மன்னிப்பு கேட்கவும், மன்னி க்கவும் அவகாசம் இல்லாமல் போய்விடும் அவலம். அவற்றை எவ்வாறு சரி செய்கிறார் என்பதே கதை.

கதை சுருங்கக்கேட்க்கையில் நன்றாக இருகிறது. அனால் கமல் இதை விரிவு படுத்தி திரைக்கதையாய் வடித்த விதம் - கல்யாணப் பந்தியில் ஆசையாய் கேசரியை அள்ளி வாயில் வைக்கையில் இனிப்பதற்கு பதிலாக உப்புக்கைத்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு ஒரு கரண்டி கேசரியை சாப்பிட்டு முடிக்கையில், நம்மை கேட்காமல் மேலும் நான்கைந்து கரண்டி உப்பு கேசரி பரிம்மாரப்பட்டால்? மிகவும் தெரிந்தவரின் கல்யாணம்.. சாப்பிட்டுத்தான் வர வேண்டும். என்ன செய்வீர்கள்? பிதுங்க பிதுங்க முழித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டு எழுந்து வந்து - கேசரி எப்படி என்று வீட்டார் கேட்க்கையில் - 'முந்திரி சூப்பர்' என்று பதில் அளிப்பது போல் இருக்கிறது.

மனோரஞ்சன் தன குருவிற்கு நன்றிக்கடன் செலுத்த தான் நடிக்க இருக்கும் படத்தை அவரை இயக்க வைக்கிறார். அதுதான் திரைக்கதையில் இன்னொரு கதை. அதில் வரும் கமலின் பெயர் உத்தமன். மனோரஞ்சனின் மனத்தில் எழும் அச்சத்திற்கும் கேள்விகளுக்கும், உத்தமன் பதில் கூறுகிரார்ப்போல் திரைக்கதை. உத்தமனின் கதை காமெடிக்கதை. மனோரஞ்சனின் கதை tragedy கதை. இதில் உத்தமனின் காமெடிக்கு நாம் சிரிக்கவுமில்லை, மனோரஞ்சனின் சோகத்திற்கு அழவும் இல்லை. 


உத்தமனின் கதையில் - தெய்யம் நடனங்கள், பூஜா குமாரின் நடனம், ஞானசம்பந்தரின் "என்ன இருந்தாலும் இடது காது போல வருமா?" என்ற வசனம் - இவைதான் கேசரியின் முந்திரிகள். மற்றனைத்தும் உப்புதான்! 

கமலிடம் அவர் ரசிகர் பட்டாளம் தாழ்மையோடு கேட்டுக்கொள்வது - தயவு செய்து நகைச்சுவை எழுதாதீர்கள். மிகவும் மோசமான வசன நகைச்சுவை. இதில் slapstick வேறு முயன்றிருக்கிறார் கமல். கமலுக்கு வராத நடிப்பென்று ஒன்று இருப்பின் அது இதுவாகத்தான் இருக்கும்... 

மனோரஞ்சன் கதையில்  - ஊர்வசி அவரது மனைவி. அண்ட்ரியா - செட் அப். ஆங்கிலம் பேசும் பையன் (பைய்யனுக்கு அழ வரவில்லை என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் முகத்தை மூடிக்கொண்டே அழ வைத்திருக்கிறார்கள்). ஊர்வசிக்கு முன்னால் இருந்த காதலிக்கு ஒரு பெண் குழந்தை ('பூ' பார்வதி), அவரின் வளர்ப்பு தந்தை ஜெயராம் - தெலுகு பேசும் மாமனார் (கே விஸ்வநாத்) மாமியார், கூடவே எம்.எஸ். பாஸ்கர். [அந்த முன்னாள் காதலியின் பெயர் யாமினி. இந்த பெயரை வைத்துக்கொண்டு யாம் இனி, யாமினி என்று வார்த்தை விளையாட்டு வேறு! ஐய்யோடா சாமி! - if I split this word into parts like Kamal - Ai! Yoda Saami! - If Star wars were dubbed in Tamil.. you get the point. கடுப்பாகுதுல்ல? லைக் லைக். சேம் சேம்.]

இவர்கள் அனைவரோடும் ஆளுக்கு ஒரு எமோஷனல் காட்சி இருக்கிறது. இவை எதுவுமே ஒட்டவில்லை. ஊர்வசியோடு மருத்துவமனையில் வரும் காட்சி பாஸ் மார்க். மற்ற அனைத்திலும் பொதுவாக ஈரம் இல்லை. 'க்ரேவ் டேஞ்சரில்' இருக்கும் மனோரஞ்சனின் மேல் நமக்கு அனுதாபம் வர வேண்டாமோ? சுத்தமாக வரவில்லை. "அன்பே சிவத்தின்" நல்லாவின் மேல் எவ்வளவு அபிமானம்/அனுதாபம் வந்தது? ஒரு வேளை அது மதனின் எழுத்தாலா? இருக்காலம்!

மீண்டும் கூறியாக வேண்டும் - படத்தின் பெரிய மைனஸ் - கமலின் எழுத்தும், திரைக்கதையும். படத்தில் ஒரு காட்சியில் மனோரஞ்சன் நடித்த ஒரு காட்சியை திரையில் ரஷ் பார்ப்பார்கள்.அப்போது மனோரஞ்சன் தூங்கிவிடுவார். எனக்கென்னவோ நிஜமாகவே கமல் தூங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. அவ்வளவு போர்!! 

வாழ்கை நிரந்தரமில்லை என்று படத்தில் கருத்து சொல்லும் கமலுக்கு -  தனது எழுத்துக் கூர்மை கூட நிரந்தரமில்லை என்று  யார் கூறுவார்??

இசை, ஒளிப்பதிவு நன்று. கமல் படத்தில் கிரீன் மேட் பிரயோகம் அப்பட்டமாக தெரிவது புதிதில்லை. இதுலும் சப்-ஸ்டாண்டர்ட் VFX. 

பாலச்சந்தரை கடைசியாக திரையில் பார்த்தது மட்டுமே மனதில் நிற்கிறது.

உத்தம வில்லன் - உத்தமனும் இல்லை. வில்லனும் இல்லை. அட! ஒரு எழவும் இல்லை! 

Created a Meme for Uththama Villain as part of the review!