Wednesday, May 23, 2018

பரப்பார்வை - 3: ஸ்டெர்லைட் கொலைகள்

சம்பவம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பத்திற்கும் மேற்பட்டோர் இறப்பு

நான் அமெரிக்காவில், அதீத இயற்க்கை வளம் கொண்ட பசிபிக் நார்த் வெஸ்ட் பகுதியில் வசிக்கிரேன். மாசற்ற காற்றும் நீரும் விம்மிக்கொண்டு இருக்கும் இடம் அது. இப்போது மணி 12:26am. வீட்டில் என்னைத்தவிர அனைவரும் தூங்கிவிட்டார்கள். என் இரவில் நேற்று என் வயதொத்தோர் சிந்திய ரத்தம் பிசு பிசுத்துக்கொண்டு இருக்கிறது. என் யூ டியூப் பின்தொடரல்கள், முகநூல் சுவர் பதிவுகள், வாட்ஸாப்ப் தகவல்கள் அனைத்திலும் "தூத்துக்குடி" செய்திகளை பார்த்தும், கேட்டும், படித்தும் தேங்கிய என் கையாலாகாத கோபங்கள் என்னை தூங்க விட மறுக்கின்றன.

எக்கச்சக்க தகவல்கள். எவை உண்மை? எவை பொய்? இது சரியா? தவறா? தற்செயலா? திட்டமிட்ட சதியா? எத்தனை பேர் இறந்தார்கள்? அது கூட சரியாக தெரிவிக்கப் படவில்லை.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு "தூத்துக்குடியில் மெரினா" என்று இணையத்தில் பரவலாக ஒரு செய்தி வந்தது. ஓரிரு வாரங்களில் நமது கவனம் காவேரிப் பிரச்சனையில் திசை திரும்பியது. #GoBackModi என்றோம், ஐ பி எல் பிரச்சனை, கர்நாடகா தேர்தல் என்று நம் கவனம் சிதறி ஸ்டெர்லைட் பற்றி வழக்கமான மறதி நிலைக்கு வந்திருந்தோம். 100வது நாள் போராட்டம் என்றதும் மக்களுக்கு மீண்டம் லேசாக ஒரு ஆர்வம் வந்தது.. மீண்டும் கவனித்தார்கள்.. அப்போதுதான் நடந்தது இந்த அசம்பாவிதம்.

தெரிந்த தகவல்கள் என்ன?

- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தவுடன், நான்கு நாட்களுக்கு முன்பே போராட்டத்தில்  முக்கியமானவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

- மாவட்ட எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை

- 144 அமலுக்கு வந்தது.

இவை எல்லாம் அரசாங்கம் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்.

சம்பவ தினத்தன்று - போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வரும் வழியில் மாடுகளை அவர்கள் மீது ஏவியதாக கூறுகிறார்கள். அதற்க்கு பதில் கொடுக்கும் விதமாக இவர்கள் கல் ஏறிய, அவர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீச, போராட்டம் வன்முறையாக மாறுகிறது. அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி வழங்கியதாக கூறுகிறார்கள்.

---

"போராளிகள் நடுவே தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள். பெட்ரோல் வைத்து வாகனங்களை கொழுத்த வந்தால் போலீஸ் என்ன சும்மா இருக்குமா?" என்பதே ப்ரோ-அரசு மக்களின் வாதம். யார் தீவிரவாதி என்பதற்கு - "அடி உதை கொழுத்து என்பவன் தீவிரவாதி.. அவர்களை சுடுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்கிறார்கள்.

ஆம் - நானும் சில பதிவுகளை பார்த்தென் - அதில் பொது மக்கள் போலீசாரை சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம்கொட்டுகிறது. அவரை காயப்படுத்தியவர்களே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வத்தையும் பார்த்தேன். (கீழே லிங்க்)

https://www.facebook.com/100007354216323/videos/vb.100007354216323/2058417224413398/?type=2&theater

கலவரத்தை துவங்கியது யார்? போராட்டத்தை தூண்டியது யார்?மக்கள்தான். அதனால் அவர்களை அடக்க எடுத்த இந்த நடவடிக்கை சட்டப்படி சரிதான் என்கிறார்கள்.

மக்களின் கேள்விகள் என்ன?

1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சட்டம் சொல்வது என்னவென்றால் -

"ஒரு ஆலையினால் ஏற்படும் மாசு - மனிதர்களையோ, விலங்குகளையோ, அங்கு உள்ள மரம் செடி கொடிகளையோ பாத்தித்தால் - அது சட்டப்படி குற்றம்" என்கிறது

http://envfor.nic.in/legis/env/env1.html

Red category-யில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை இந்த விதிகளை மதிக்கவில்லை. இதை மீறி நடந்து கொண்டு இருக்கும் ஆலையை விரிவு படுத்த அனுமதி கொடுக்கும் பட்சத்தில் - இந்த போராட்டத்தைத் தூண்டியது யார்?

"ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கசியும் ஆர்சனிக் வாயுவினால் வருடம்தோறும் 400-500 உயிர்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள்" என்கிறது ஒரு ஆய்வு. இது அரசாங்கத்திற்கு தெரியாமல் இல்லை. இந்த ஆலை எங்களுக்கு வேண்டாம் என்று அப்பகுதி மக்களே கூறியும் அரசாங்கம் ஒன்றும் செய்ய வில்லை என்றால் - இந்தப் போராட்டத்தைத் தூண்டியது யார்?

வெறும் நூறு நாள் போராட்டம் அல்ல இது.  கிட்டத்தட்ட 22 வருடங்களாய் நடக்கின்ற போராட்டம். அதன் வரலாறு இதோ -

https://www.thenewsminute.com/article/history-sterlite-thoothukudi-story-betrayal-crony-regulators-78481

சென்னை உயர் நீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும் என்று 2010ல் கூறிய பிறகும் சஉச்ச நீதிமன்றம் இதனால் வரக்கூடிய பொருளாதார நன்மைகளை சுட்டிக்காட்டி இதைத் தொடர அனுமதிக்கும் என்றால் - இந்தப் போராட்டத்தைத் தூண்டியது யார்?

2016-ஆம் ஆண்டு மாநில அரசு மீண்டும் ஒரு முறை - இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று உச்ச நீதி மன்றத்தில் வக்காலத்து வாங்கியபோது  - இந்தப்போராட்டத்தைத் தூண்டியது யார்?

மக்களைக் காக்க வேண்டிய Pollution control board-உம் அரசும் தத்தன் கடமைகளை செய்யாமல் விட்ட போது, தனது மண்ணிற்காக போராடிய மக்கள் எந்த விதத்தில் தவறிழைத்தார்கள்?

என் கேள்விகள்..

- அனைத்துக்கட்சிகளும் முதலில் ஆதரவு தெரிவித்து, களத்திற்க்கே போய் மக்களை சந்தித்து வந்தார்கள். நேற்று 100வது நாள் போராட்டத்திற்கு ஏன் யாரும் போக வில்லை? ஒரு அரசியல் தலைவரும் அங்கே இல்லை. ஏன்?  அப்படி என்றால் இவர்களுக்கும் facebook புரட்சியாளர்களுக்கு என்ன வித்தியாசம்? 

- முன்னெச்சரிக்கை எடுத்த அரசு, ஏன் மக்களிடம் நேரடியாக பேசுவதற்கு தயங்குகிறார்கள்?

- இவ்வளவு ஆண்டுகள் எப்படி இந்த வேதாந்தா நிறுவனம் நடைபெறுகிறது? யாரை கையில் போட்டுக்கொள்கிறார்கள்? ஓஹ்....


நான் கூறுவது மோடியை மட்டும் அல்ல.. இவ்வளவு ஆண்டுகள் நம்மை ஆண்ட அனைவரையும்தான். இது ஒரு சோறு அவ்வளவுதான்..

- கல் எறிந்த மக்களை துப்பாக்கியில் சுடுவது எந்த வித்தத்தில் நியாயம்? ஏன் ரப்பர் குண்டுகளைப் பயன் படுத்த வில்லை? ஏன் முகத்திலும் மார்பகத்திலும் சுட வேண்டும்? உயிர் போய்விடும் என்று தெரியாதா?

இதற்க்கு - "அவர்கள் வேண்டும் என்றே அப்படிச் சுடவில்லை.. " என்று சப்பை கட்டு காட்டுபவர்களுக்கு - இதோ பிரத்யேக வீடியோ. இதைப் பதிவேற்றம் செய்த செய்தி நிறுவனம் எந்நேரமும் இதை அகற்றலாம் என்பதால், என் youtube சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறேன் -




"ஒருத்தனாவது சாகனும்" என்று கங்கணம் கட்டிக்கொண்டு போலீசார் இயங்கியது இங்கே பதிவாகி இருக்கிறது. நோக்கத்தோடு செய்த கொலைகள்தான் இவை.

-----
அரசும், காவல்துறையும், நீதி மன்றங்களும் மக்களுக்கு எதிராக இருந்தால் - மக்கள் எங்கே போவார்கள்? 10 லட்சம் நிதித் தொகையை தூக்கி எறிந்துவிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுபவர்களுக்கு நமது பதில் என்ன?

அனைவரும் இதைப்பற்றி.. இதைப்பற்றி மட்டும் பேசுவதே அவர்களுக்கு நாம் அளிக்கும் பதில்.

போராட்டத்தைப் பிளவுபடுத்தும் சதிகளும், அடக்குமுறைகளும் தொடர்ந்தாலும், தமிழகம் ஒன்றிணைந்து நின்றால் இந்தப் போராட்டத்தில் மாபெரும் வெற்றியை நிச்சயம் ஈட்டும்

No comments:

Post a Comment