Saturday, September 1, 2012

முகமூடி - சூப்பரும் இல்லை.. ஹீரோவும் இல்லை..


முதலில் நான் மிஸ்கின் ரசிகன் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிரேன் . ஆனால் மிஸ்கின் மீது கொஞ்சம் மதிப்பு இருப்பது உண்மைதான். காரணம் அவரது சினிமா திறன் அல்ல. அவர் சினிமாவை வெறும் வியாபாரமாக பார்க்காமல் ஒரு கலையாக பார்ப்பதுதான். அட்லீஸ்ட் அப்படி பார்ப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிராரே அதற்காகவேனும் மதிக்கவேண்டிஇருக்கிறது.

சரி முகமூடிக்கு வருவோம். ஒரு சாதாரண சென்னை இளைஞன். அப்பாவிடம் திட்டுவாங்கும், தன்னை ரவுடியாக நினைக்கும் பெண்ணிடம் காதல் வசப்படும், நண்பர்களோடு தெருக்களில் சுற்றும், குருவிடம் மரியாதையில் பம்மும், அதீத க்லீஷேக்கள் கொண்ட இளைஞன், முகமூடி அவதாரம் எடுத்து, ஊரையே சூறையாடும் திருட்டுக்கூட்டதை வீழ்த்துகிறான். கதை அவ்வளவுதான். இதைச்சொல்ல மிஸ்கின் எடுத்துக்கொண்டது இரண்டே முக்கால் மணி நேரம். இவர் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்பதை முழுவதும் புரிந்துகொண்டுதான் கையில் எடுத்தாரா என்பது தெரியவில்லை. ஹாலிவுட்டில் எடுக்கிறார்கள் என்றால் ஆதற்கு காரணம் அங்கு சாதாரண படங்களில் வெறும் ஹீரோக்கள் நடிப்பார்கள். தமிழ் படங்களில் சாதாரண ஹீரோக்களே சூப்பர் ஹீரோக்கள்தான். உதாரணம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இவர் சூப்பர் ஹீரோ என்று சொல்லிவிட்டு மிகச்சாதாரணமாக காண்பித்தது பெரும் ஏமாற்றம்.

ஜீவா ஆறு மணி நேரம் பயிற்சி செய்தார். ஹாங் காங்கில் நங்கள் ஆடை தயாரித்தோம் என்று பேட்டிகளில் சொல்லி என்ன பிரயோஜனம்? திரையில் பிரதிபலிக்க வேண்டாமா? பாவம் ஜீவா. அவரை விட பரிதாபம் நரேன். கொடூர வில்லன் என்று மிஸ்கின் மட்டும் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். பால் வடிகிறது. 

மேலும் படிப்பதற்கு முன் - 



ஒத்துக்கொள்கிறோம். பாட்மேனோடு ஒப்பிடவேண்டாம் என்று நானும் முயற்சி செய்தேன். ஒப்பிட முடியாதபடி நீங்க எடுத்திருந்தால் உங்கள் வேண்டுகோள்  நியாயமாகி இருக்கும். பாட்மேனில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களையும் தமிழ் சாயம் பூசி ஆலயவைத்துவிட்டு ஒப்பிடாதே என்று கூறினால் என்ன செய்வது? 

பாட்மேன் - ஜீவா
அல்பிரட் - கிரிஷ் கர்னார்ட்
லூசியஸ் - அந்த இன்னொரு கிழவர் 
கோர்டன் - நாசர் 
ரேச்சல் - பூஜா ஹெட்கே 
ஸ்கேர் க்ரோவ் - நரேன்
ராஸ் ஆல் குள் - மாஸ்டர் 

இப்படி பல கதாப்பாத்திரங்கள் பாட்மேனை ஞாபகப்படுத்துகின்றன. இதில் பரிதாபம் - இவை அனைத்தும் திணிக்கப்பட்ட பாத்திரங்கள். ஜீவாவின் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர குடியிருப்பில் இருக்கிறார்கள். அந்தந மாடியில் ஒரு ஆஸ்பஸ்டாஸ் குடிசையில் அவரது விஞ்ஞானி தாத்தா தட்டு முட்டு சாமான்களை வைத்து வித்தை காண்பிக்கிறார். குழந்தைகள் கூட ஆசைப்படாத வகையில் ஒரு ரோபோ வைத்திருக்கிறார். இதில் "Know theyself" போர்டு வேறு தொங்குகிறது. எதோ ஒரு ஷாட்டில் இவரது சுவர் கடிகாரத்தை காண்பிக்கிறார்கள். அதில் லண்டன் கியீன் விக்டோரியா என்றெல்லாம் எதோ எழுதியிருக்கிறது. எதற்க்காக அந்த ஷாட்?

 இவர் (கிரிஷ் கர்னாட்) என்ன வேலை செய்கிறார்? ஏன் கம்ப்யூட்டர், ரோபோ, எலக்ட்ரானிக் சாதனங்களை வைத்து பழைய ரேடியோ பெட்டி போர்டையெல்லாம் சம்பந்தமே இல்லாமல் சொல்டரிங் செய்கிறார்? தண்ணிக்காப்பி அம்மாவிற்கு ஹார்லிக்ஸ் தாத்தாவா? எப்படி? இதெல்லாம் விட க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் ஷெர்லாக் ஹோம்ஸ் ஆடை அணிந்து கொண்டு பைப்  ஊதிக்கொண்டு  வருகிறார். தலை சுற்றுகிறது.

இவர் பரவாயில்லை. அதே மொட்டை மாடியில் இன்னொரு தத்தா இருக்கிறார். சைனீஸ் எம்பசிக்கு டிராகன் பொம்மை செய்து கொடுப்பதாக காண்பிக்கிறார்கள். மிகப்பெரிய டிராகன் பொம்மையை சைனீஸ் எம்பசி எப்போதும் அரை போதையில் இருக்கும் தாத்தாவிடமா செய்யக்குடுக்கும்? அதும் தனி ஆளாக செய்து முடிக்கிறார்! முகமூடியின் ஆடையை ஒரே இரவில் வடிவமைத்து லோகோவேல்லாம் செய்து குடுக்கிறார். கவசம் எல்லாம் வைத்துத்தைத்த அதில் வில்லன் குத்தியதும் ஹீரோவிற்கு வலிக்கிறது! இவர் யார் என்று கடைசிவரை யாருக்கும் தெரியவில்லை.

இவருக்கு உதவியாளராக ஒரு கூன் விழுந்த இளைஞர். மிஸ்கின் சிக்ணேச்சராம். என்னத்த சொல்ல?!

வில்லன்களுக்கு வருவோம். ஊர்  ஊராய் கொள்ளை அடிக்கும் திருட்டுக்கூட்டம். அதும் ஒன்பது மாசமே ஒரு ஊரை சூறையாடும் கூட்டம். அவர்கள் எதற்கு "டிராகன் குங் பூ" என்று ஒரு பயிற்சிப்பள்ளி நடத்த வேண்டும்? நரேன் ஏன் இடுப்பை வளைத்து வளைத்து நடக்கிறார்? ஒரு கொடூர வில்லனின் நடையா அது? இவருக்கும் ஜீவாவின் மாஸ்டருக்கும் இடையே ஆன ப்ளாஷ் பாக் எந்த விதத்தில் கதைக்கு உதவுகிறது? க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு மரைன் கோஸ்ட் கார்ட் கூட்டத்தையே ஒடுக்குவது ஐந்து பேர் கொண்ட குழுவா? இவை அனைத்தையும் விட தமாஷ் - தேமே என்று அந்தரத்தில் தொங்கும் வான் ஒன்றின் மீது ஒரு வில்லன் சம்பந்தமே இல்லாமல் தாவிக்குதித்து அதன் மேல் பகுதியை (top) பட்டன் கத்தியால் குத்தி உள்ளே இருக்கும் குழந்தைகளை ரகளை செய்கிறார். குழம்புகிறது. இயக்குனரின் குறிக்கோள்தான் என்ன?

சரி இவைஎல்லாம் ஓ.கே. எந்தப்பெண் தனது ஸ்கூட்டியின் பாக்ஸில் ஒரு இருபுக்கம்பி. இரண்டு செங்கல் மற்றும் ஒரு கண்ணீர் ஸ்பிரே வைத்துக்கொண்டு அலைகிறார்? இந்த ஹீரோயின் பார்க்கவும் சகிக்கவில்லை.

போலீஸ்காரர்கள் உடனுக்குடன் முகமூடியிடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். முகமூடி என்ற கதாப்பாத்திரம் நம் மனதிற்குள் வந்து உட்க்காரும் முன். "முகமூடி..தமிழ் நாடே உங்கள நம்பித்தான் இருக்கு" என்று அவர்கள் பேசுவது, முகமூடியை இன்னும் நம்மை விட்டு தூரம்தான் அழைத்து செல்கிறது.

காமெரா - ஸ்ஸ்ஸ்ஸ்..தூரத்தில் இருக்கும் அவுட் ஆப் போக்கஸ் ஆசாமிகள் காட்சி முடிவதற்குள் அவசர அவசரமாக போக்கசிற்குள் வருகிறார்கள். ஓடியோ. வண்டியிலோ. கத்திக்கொண்டோ. இறந்துபோயோ. இருட்டிலோ. வெளிச்சத்திலோ. இதேதான் படம் முழுக்க. மகா மட்டம்.

வசனங்கள் - அட போங்க பாஸ்... ஒரு உதாரணம்:

"இவ்ளோ பெரிய வீட்ல போட்லாம் (boat) வச்சு என்ன பண்றாங்க.."
"ஏதோ ப்ளான் பண்றாங்க.."
"என்ன?"
"என்னன்னு தெரியல.."
"என்ன பண்ண போற?"
"என்கிட்டே ஒரு பிளான் இருக்கு!"

வேறு ஏதும் தேவை என்றால் படம் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

இதற்க்கு மேல் கரித்துக்கொட்ட இருந்தாலும் இதுவே போதும்.

படத்தின் ஒரே பிளஸ் - கே - இசையமைப்பாளர்.

மிஸ்டர்.மிஸ்கின். உங்களுக்கு நிறைய்ய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். பிடித்திருக்கலாம். அவை அனைத்தையும் அனாவசியாமாக திணிக்காதீர்கள்.

உங்களருகே நிறைய்ய பேர் சிங்கி அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. 

உதாரணம்: ஒரு கற்பனை உரையாடல்-
நீங்கள் படத்தின் கடைசிக்காட்சியை விவரிக்கும் போது - 

"நம்ம ஹீரோ எல்லாத்தையும் காப்பாத்திட்டு டாட்டா காமிச்சுட்டு ஓட ஆரம்பிக்கறான்.. அப்டியே ஜூம் அவுட் பண்ணி லெப்ட் பேன் பண்ணி ஹீரோ ரைட்ல ஓடிட்டே இருக்கான்.. லெப்ட்ல போலீஸ் வருது.. லாங் ஜூம் அவுட்..ஓடிக்கிட்டு இருக்கற ஹீரோ இருட்டுல தெரியாம போயிடறான். ஒரு அஞ்சு செகண்ட் காமிச்சுட்டு அப்படியே ப்ரீஸ் பண்றோம். ஓ.கே?"

"அடடா!" "சார்.. சூப்பர் சார்.." "பலே பலே" - இந்த ஆசாமிகளை முதலில் அடித்து விரட்டுங்கள். 

பொதுவாகவே ஹீரோக்களிடம் நமக்கு நம்பிக்கை உண்டாக வேண்டும். "இவன் நம்மாள்டா" என்று தோன்ற வேண்டும். ஆதற்கு - ஒன்று - அவன் நம்மை நோக்கி வரும்படி காட்சி இருக்க வேண்டும்.. அல்லது.. அவன் பின்னால் நாம் போவது போல காமரா அவனை தொடர வேண்டும். பீ.ஜி.எம்மில் போலீஸ் சைரன் போட்டுக்கொள்ளலாம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். திரையில் ஹீரோ உட்புறம் ஓடும் போது ஜூம் அவுட் - மோசமான காம்பினேஷன். இடைவெளியை கூட்டத்தான் செய்கிறது.

 நீங்கள் உங்களையே மிகப்பெரிய இயக்குனராக நினைத்துக்கொள்வதை நிறுத்துங்கள் ப்ளீஸ். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு பிரேமும் ஆயிரம் கதை சொல்கிறது என்று நினைப்பதை நிறுத்துங்கள். உண்மையில் சொல்லவில்லை. அஞ்சாதே நல்ல படம். மற்ற அனைத்தும் எதோ சுமார் ரகம்தான். நந்தலாலாவை நீங்கள் காப்பி என்று ஒப்புக்கொள்ளும் முன் என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று உதார் விட்டது எங்களுக்கும் தெரியும். கருப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு, இரண்டு கைகளையும் சுழற்றி சுழற்றி,  "ஆச்சுவலி" என்று இடைச்செருகி, "இதுக்கு நீங்க கை தட்டனும்.. ப்ளீஸ்" என்று பேசிக்கொண்டிருந்தால் போதாது.

நீங்களே சொன்னது போல். Know thyself. ஆல் தி பெஸ்ட்.

இரண்டாம் பாகம் வேறு வரும் என்றீர்கள். வேண்டாமே!


2 comments:

  1. Replies
    1. padatha paaru.. pathuttu thukkam varama ukanthuttu irukken! nejammave kozhabi poitten!

      Delete