Thursday, August 13, 2009

தரையிறங்கும் விமானங்கள்...



எனக்கும் உயரத்திற்கும் சின்ன வயசிலிருந்து பந்தம் உண்டு. உயரங்கள் மீது எனக்கிருந்த பயம் கலந்த பிரியத்திற்கு தீனி போட்டது முதன்முதலில் மரங்கள்..தலையெல்லாம் பூக்கள் பூத்து காற்றின் பாடலை மொழிபெயர்த்தபடி மரங்கள் என்னை மேலே வர அழைத்தன. மரங்களிம் உச்சாணிக் கிளையில் பறவைகளின் கூட்டிற்கு பக்கத்தில் அமர்ந்து அடி வயிற்றில் பயம் உருள பூமியைப்பார்க்க வேண்டும் என்ற பரவசம் இப்போதும் என்னிடத்தில் இருக்கிறது.. அனால் நான் மரங்கள் ஏறுவதில் அவ்வளவு கில்லாடி இல்லை.

எத்தனை எத்தனை மரங்கள்? ஒவ்வொரு மரதிடமும் சொல்வதற்கு ஒரு கதை ('நேற்று இரவு இங்கே என்ன நடந்தது தெரியுமா?'), கொடுப்பதற்கு ஒரு அனுபவம் ('வா என் நிழலை அனுபவி!'), விடுப்பதற்கு ஒரு சவால் ('என் மீது ஏறிவிடுவாயா நீ?') இருந்தது. ஏற முடியாத வழுக்கல்களுடன் சில மரங்கள்..முள் வெளியோடு சில மரங்கள்.. மாரெலாம் தழும்போடு சில மரங்கள்.. பார்ப்பதற்கு வலுவாகத்தேரியும் கிளைகளும், கால் வைத்தவுடன் உடைந்துவிடும் என்று நன் ஏற முயன்று விழுந்தபோது தெரிந்தது.. அன்று முதல் மரம் ஏறும் ஆர்வம் குறைந்தது.



அப்போது நாங்கள் குடியிருந்த வீடு மிகச் சிறியது. அடுத்து நாங்கள் குடியேறிய வீடிற்கு கொஞ்சம் உயரம் ஜாஸ்தி. அதன் மொட்டை மாடியில் இருந்து பார்த்தல் மரத்தின் உச்சந்தலை தெரியும். அட! இங்கிருந்து மரங்களே குள்ளமாக இருக்கிறதே! என்று மகிழ்ந்தேன். மரம் ஏறுவதை விட மொட்டை மாடி ஏறுவது சுலபமாக இருந்ததால், மொட்டை மாடியின் மீது காதல் கூடியது! அங்கிருந்து பார்த்தல் சுற்று வட்டாரம் மிக ரம்மியமாகத் தெரியும். அந்த வீட்டில், நான் வீட்டிற்குள் இருந்ததை விட மொட்டை மாடியில் இருந்ததே அதிகம். யாரேனும் விருந்தாளிகள் வந்தால் அம்மா சமையலறை ஜன்னலில் இருந்து என்னை அழைப்பாள். நானும் "வரேன் மா!" என்று இறங்கிவிடுவேன்..

அப்படி ஒரு நாள் என் அம்மா அழைத்தபோது நான் கவனிக்க வில்லை.. காரணம், நான் மாடியில் பேசிக்கொண்டிருந்தேன், என் பக்கத்தில் அமர்ந்த காகத்திடம்.

" இந்த உயரம் போதுமா? மேல பறக்கலாம் வா!" என்றது.

"என்னால முடியாதே!" என்று உதடு பிதுக்கினேன்.

"நான் சொல்லித்தரேன் வா!"

"வேணாம். பயமா இருக்கு.."

"மேல போனா மேகத்தை பாக்கலாம். பூமியை பாக்கலாம்.. கடல் கூட காமிக்கறேன்..வா!"

"ரெக்கை முளைக்கட்டும் வரேன்!"

அன்று முதல் பறக்கும் பறவை எல்லாம் விமானமாகத தெரிந்தது... அல்லது பறக்கும் விமானம் எல்லாம் பறவைகளாக தெரிந்தது. விமானங்களால் வசீகரிக்கப்படாத குழந்தைகள் உண்டா? அதன் "ந்கிய்ய்ய்ய்ய்ய்ய் ..." சத்தம் கேட்டால் தெருவில் போகும் சிறுவர்கள் அனைவரும் அண்ணாந்து பார்ப்பதை பார்த்திருக்கிறீர்கள்தானே!? எல்லோரும் ஒரே மாதிரி வாயை பிளந்து பார்ப்பதை பார்க்கவே கவிதையாக இருக்கும். ஒரு முறை அப்படி வாய் பிளந்து பார்த்துக்கொண்டு நடக்கையில் கல் தடுக்கி கீழே விழுந்து முட்டி சிராய்ந்த தழும்பு இன்னும் இருக்கிறது.

அன்று 'இனிமேல் நாம அதை பாக்கவே கூடாது' என்று முடிவு செய்தேன். வாரம் இரு முறை தவறாமல் "ந்கிய்ய்ய்ய்ய்ய்ய்..." என்று சத்தம் போட்டு என்னை சமாதானப்படுத்தியது.. கொஞ்ச நாளில் 'சரி பொழச்சு போ' என்று மண்ணித்து விட்டேன்.

கோடை விடுமுறைகளின் போது சென்னைக்கு என் அப்பாவோடு ரயிலில் செல்வேன். மதுரையில் இருந்து சென்னை போகும் எல்லோரும் ஏன் பாண்டியன் ரயிலிலேயே செல்கிறார்கள் தெரியவில்லை! அப்போது ரயிலின் தடக்-தடக்கில் உறங்கிவிடுவேன். அதிகாலையில் ரயில் மீனம்பாக்கம் கடக்கையில் என் அப்பா என்னை எழுப்பி விடுவார். கண் விழித்தவுடன் 'குயின் பிரா' என்ற சுவர் விளம்பரம் தெரியும். அதையும் தாண்டி மீனம்பாக்கம் விமான நிலையம் தெரியும். அப்போது ரயில் கடந்து செல்லும் அந்த சில வினாடிகள்தான் எனக்கும் விமானத்திற்கும் இருந்த மிக நெருங்கிய உறவு. நான் மீனம்பாக்கம் கடக்கையில் கண்டிப்பாக எதோ ஒரு விமானம் மேலே ஏறிக்கொண்டோ, தரையில் இறங்கிக்கொண்டோ இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து, ஒரு சிநேக சந்திப்பிற்கு மும்பை செல்ல நேர்ந்தது. அப்போதுதான் முதன் முதலில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு வந்தது. நண்பர்களுக்கும் சுற்றங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையில் நின்று டாட்டா காண்பித்த கால்கள்,எல்லை தாண்டி விமான நிலையத்தின் உள்ளே சென்றது.

விமான நிலையங்களில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். கதைகளை எல்லாம் அலசிப்பார்த்தால் சில கதைகளின் தொடக்கம், இன்னொரு கதையின் முடிவில் இருக்கும். எல்லா விமான நிலயத்திலும் விடைபெறும் ஒருவருக்காக ஒரு துளிக் கண்ணீர், ஒரு மனைவியின் பிரார்த்தனை, ஒரு தாயின் தேடல், ஒரு குழந்தையின் காத்திருப்பு, ஒரு நண்பனின் மகிழ்ச்சி - அதன் கான்க்ரீட் சுவர்களில் இழைந்தோடுகிறது.





விமான நியாயத்தின் எல்லா சடங்குகளையும் முடித்து விட்டு நானும் விமானத்தில் ஏறினேன். ஏர் இந்தியா விமான -சிப்பந்திகள் 'ஒரு வேளை' விமானம் நீரில் இறங்கினால் எதோ ஒரு மஞ்சள் சமாசாரத்திற்குள் காற்று ஊத்தி பிழைதுக்கொள்ளுங்கள் என்றார்கள். அதுவரை வயிற்றினுள் பரவசத்தோடு பறந்த பட்டாம்பூச்சிகள், அதன் பிறகு கொஞ்சம் பயத்தோடு பறந்தன. அனைவருக்கும் இந்த 'ஒரு வேளை' பயங்கள் இருக்கத்தானே செய்கிறது? இந்த மாதிரி தருணங்களில்தான் நீங்கள் நானாவதும், நான் நீங்களாவதும் சாத்தியம் என்று படுகிறது. எல்லோருக்கும் அதே பயம். அந்த பயத்தின் விளிம்பில் கொஞ்சம் நம்பிக்கை.

இதோ விமானம் புறப்பட்டு விட்டது. கொஞ்ச நேரம் தரையில் ஊர்ந்தது. பிறகு திடீரென்று வேகம் பிடித்து பூமியை உதைத்து பறந்தது. வைரமுத்து காதலன் படத்தில் சொல்வது மாதிரி - வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது. மெல்ல, ஜன்னலில் வெளியே எட்டிப்பார்த்தேன். பூமி வேகமாக சுருங்கிக்கொண்டிருந்தது. கட்டம் கட்டமாக, பச்சையும் சிவப்புமாக வேற்று நிலங்கள். எதோ நவீன ஓவியம் போல் இருந்தது. மெல்ல மேல சென்று கொண்டிருக்கிறேன் என்ற உள்ளுணர்வு சிலீரென்று இருந்தது. இப்போது விமானம், முழுவதும் மேலே சென்றுவிட்டது போலும். சாய்மானமாக இருந்த விமானம் இப்போது நேராகப்பறக்க ஆரம்பித்தது. பைலட் ஒலி பெருக்கியில், விமானம் ஆட்டோ பைலட்டில் இருப்பதாகச் சொன்னார்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். அப்போதுதான் எனக்கு வானம் வேறு, மேகம் வேறு என்று புலப்படுகிறது. வானம் இவ்வளவு நீ(ல)ளமா? மேகம் இவ்வளவு வெள்ளையா? அதன் அமைதியான அழகை வார்த்தைகள் வர்ணிக்க முடியாது. ஒரு முறையேனும் விமானத்தில் சென்று பாருங்கள்.ஏதோ சரஸ்வதி சபதம் பட 'செட்'டிற்குள் நுழைந்தது போல, சுற்றிலும் மேகங்கள் இருக்கும். ஜன்னலின் ஓரம் எட்டிப்பார்த்தேன், எங்கேயேனும் நாரதர் வேடத்தில் சிவாஜி தெரிகிறாரா என்று! இல்லை.

எனக்கென்னவோ மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போல இருப்பதாக தோன்றுகிறது. முதலில் மெல்ல ஊர்ந்து, பிறகு எதிர்கால பயத்தோடு மெல்ல எழுந்து, அதன் பிறகு வாழ்வில் 'ஆட்டோ பைலட்' போட்டுவிட்டு, சுதந்திர வானில் அலைந்து திரிந்து, பின்னதொரு நேரத்தில் இறங்க வேண்டிய இடம் நெருங்கியவுடன், மீண்டும் இறங்கி, ஊர்ந்து முடியும் மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போலத்தான் தோன்றுகிறது.

மும்பை நெருங்குகிறது. மேகங்களில் இருந்து கீழே இறங்கத்தொடங்குகிறது எனது விமானம். இப்போது பயம் கொஞ்சம் குறைந்து இருந்தது. மனம் லேசாகி இருந்தது. காரணமே இல்லாமல் "பறக்காத பறவைக்கெல்லாம், பறவை என்று பெயரில்லை.." என்ற பாடலை முனு முனுத்தேன். கீழே எட்டிப்பார்த்தேன்.

அதோ அங்கே ஒரு சிறுவன் மரம் ஏற முயற்சிக்கிறான். அதோ இன்னொருவன் காகத்தோடு பேசுகிறான். எங்கோ போகும் ரயிலில் இருந்து ஒரு சிறுவன் கை அசைக்கிறான். வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் கல் தடுக்கி கீழே விழுகிறான்.

எங்கோ ஒரு விமானம் மேலே ஏறுகிறது.. எங்கோ ஒரு விமானம் தரை இறங்குகிறது..

பி.கு. : வாழ்கை என்றாலும், விமானம் என்றாலும், சீட் பெல்ட் அணிந்து கொள்வது, உத்தமம்

6 comments:

  1. "எல்லா விமான நிலயத்திலும் விடைபெறும் ஒருவருக்காக ஒரு துளிக் கண்ணீர், ஒரு மனைவியின் பிரார்த்தனை, ஒரு தாயின் தேடல், ஒரு குழந்தையின் காத்திருப்பு, ஒரு நண்பனின் மகிழ்ச்சி - அதன் கான்க்ரீட் சுவர்களில் இழைந்தோடுகிறது."
    beautifully written :) :)

    ReplyDelete
  2. dei... nee ingha vanthudu... all want that for sure!

    ReplyDelete
  3. "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது."
    "பறக்காத பறவைக்கெல்லாம், பறவை என்று பெயரில்லை.."
    good comparision da... :) presence of mind... :)

    ReplyDelete