Saturday, February 20, 2010

பிரிவும்.. பிரிவு நிமித்தமும்...


உள்ளங்கையில் அள்ளிய நீராய்
வடிந்து போகின்றன
உன்னைத்
தக்கவைத்துக் கொள்வதற்கான
அத்தனை முயற்சிகளும்...

கானல் என்றும்
கவர்ச்சி என்றும்
விழிப்பின் விளிம்பில்
தோன்றி மறைந்த கனவென்றும்
ஆறுதல் மொழிகளை
அருகழைத்துக் கொண்டபின்பும்
மனதின் சுவர்களில்
பிசுபிசுப்பாய் படிகிறது
ஏமாற்றத்தின் சாயல்.

பிடிவிலகிய அதிர்வில்
பற்றிகொள்ள கரம்தேடி
இருப்புகொள்ளாதலைகிறது
கைவிடப்பட்ட பிரியங்கள்..

நம்பிக்கைகள் நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றன
நேசமும்..மற்றனைத்தும்..

சொல்லிவிட முடியாத வலியொன்று
செல்லுமிடமெல்லாம் தொடர்கிறது...

இருக்கட்டும்..
உனக்கான
என் செயல்களையெல்லாம்,
உன் இருத்தலியக் கொள்கைகள்
கொன்று புதைத்தன இன்று..
அதனாலென்ன?

அன்பின் அர்த்தங்கள்
சிலநேரங்களில் பிரிதலிலும்
இருக்கக் கூடும்..

போகட்டும்..

செத்துப்போன
என் சொற்களையெல்லாம்
எதற்கும் சேமித்து வை ஓரமாய்..
ஒருவேளை
நானில்லாத நாட்களில்
அவை மீண்டும் உயிர்த்தெழலாம்... உனக்காக...

3 comments:

  1. hey.. awesome..
    பிடிவிலகிய அதிர்வில்
    பற்றிகொள்ள கரம்தேடி
    இருப்புகொள்ளாதலைகிறது
    கைவிடப்பட்ட பிரியங்கள்..
    rombha nalla eludhirukka..
    edho sila pain.. words ah pirandhirukku.

    ReplyDelete
  2. i was like awwww !!!! nice post man... such a nice blogger... you are going into ma blog friends list for sure... :)

    ReplyDelete